தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை ஆர்.எம்.எஸ். காலனி அருகேயுள்ள சிராஜ்பூர் பகுதியைச் சேர்ந்த ரெப்கோ வங்கியில் பணிபுரியும் ஜெகதீஷ்-எழிலரசி தம்பதியரின் 22 மாத குழந்தை பாரதி முதுகுத்தண்டுவட தசைநார்ச் சிதைவு என்கிற மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.  இதனால் பாரதியின் உடல் உறுப்புகள் செயல்பாடு ஒவ்வொன்றாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நோயிலிருந்து பாரதி குணமடைய இரண்டு வயதுக்குள்ளாக ஜோல்ஜென்ஸ்மா என்ற ஊசி மருந்து செலுத்த வேண்டியுள்ளது. இந்த ஊசி அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும். இதன் விலை 16 கோடி. இந்த குழந்தையைக் உயிருடன் காப்பாற்ற வரும்

  செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள்ளாக இந்நிதியைத் திரட்ட வேண்டி அவர்களது பெற்றோர்கள் பல்வேறு முயற்சிகளை நண்பர்களுடன் இணைந்து செய்து வருகின்றனர்.




இந்நிலையில் பாரதிக்கு உதவுகிற வகையில் மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்,  மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் நிதி திரட்டும் பணியை செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்கி வைத்தார். மேலும் தஞ்சாவூர் நகரம் முழுவதும் குழந்தை பாரதிக்காக பல்வேறு இடங்களில் நிதி சேகரிக்கும் பணியை ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் காளையார் சரவணன் தலைமையில் தன்னார்வலர்கள் செய்து வருகின்றனர். இதுவரை 7 கோடி மட்டுமே சேர்ந்துள்ளது. குறைந்த காலத்தில் மேலும் அதிக நிதி தேவைப்படுவதால் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன்னார்வலர்கள் தஞ்சாவூர் பனகல் கட்டடம் எதிரில்  மனித சங்கிலி நிகழ்ச்சியை நடத்தி நிதி உதவி கோரினர்.




 இதே போல் கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் அன்பு சுவர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் பாரதிகாக நிதி திரட்டினர்.  ஊசி செலுத்துவதற்கு மூன்று நாட்களே உள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்டமின்று , தமிழகம் முழுவதும், பல்வேறு தன்னார்வ அமைப்புகள், பெண் குழந்தை பாரதிக்காக நிதியை திரட்டி வருகின்றனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ்ஆலீவர் கூறுகையில், பாரதிக்கு தேவையான நிதி பெறுவதற்காக பல்வேறு அமைப்புகள் போர்கால அடிப்படையில் நிதியை திரட்டி வருகின்றனர். நிதி திரட்ட முடிவு செய்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் வங்கியில் கணக்கு திறந்துள்ளோம். அக்குடும்பம் நடுத்தரமான குடும்பத்தை சேர்ந்தவர்கள், அவர்களால் அவ்வளவு நிதி திரட்ட முடியாது. அதற்காக தான் அனைவரும் சேர்ந்து நிதி திரட்டி வருகின்றோம். பெண் குழந்தை பாரதி  உயிருடன் நலமுடன் வாழவேண்டும் என்றார்.




இது குறித்து தந்தை ஜெகதீஸ்  கூறுகையில், இயற்கையாக புரோட்டீன் சத்து குறைபாடு காரணமாக நோய் ஏற்பட்டது. இதற்கான ஊசி மருந்தின் விலை 16 கோடி, அதை இறக்குமதி வரி 6 கோடி என 22 கோடி செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வளவு பெரிய தொகையை எங்களால் திரட்ட முடியாது. தற்போது நண்பர்கள், உறவினர்கள் உதவியால் வெறும் 7 கோடி  தான் கிடைத்துள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் ஊசி போடவேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எங்களது குழந்தை காப்பாற்ற வேண்டும் என நம்பிக்கையில் இருந்து வருகின்றோம்.  தமிழக அரசு, மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் அனைவரும் எங்கள் குழந்தையை காப்பாற்ற உதவிகள் செய்து தரவேண்டும் என்றார்.