தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மூவர் இறந்த நிலையில் மாயமான சென்னையை சேர்ந்த அண்ணன், தம்பி இருவரும் நேற்று சடலமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் இறந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து தலா ரூ. 2 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.


சென்னையை சேர்ந்த 5 பேர்


சென்னை சேத்துப்பட்டு நேரு பூங்கா அருகே ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மகன்கள் பிராங்களின் (23), ஆண்டோ (20).  இவர்களின் நண்பர்கள் கிஷோர் (எ)தமிழரசன் (20), சென்னை சோலைப் பகுதியைச் சேர்ந்த  கலைவேந்தன் (20), ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த மனோகர் (19). இவர்கள் 5 பேரும் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தனர்.


இந்நிலையில் ஜான்சன் மற்றும் குடும்பத்தினர் உட்பட உறவினர்கள் வேளாங்கண்ணி கோயில் திருவிழாவிற்காக வேனில் புறப்பட்டனர். இவர்களுடன் கிஷோர் உட்பட 3 பேரும் சேர்ந்து புறப்பட்டனர். மொத்தம் 18 பேரும் வேனில் கடந்த 6ம் தேதி நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு திருவிழாவுக்காக வந்தனர்.


குளிக்கச் சென்றவர்கள் நீரில் மூழ்கினர்


விழா முடிந்த பின்னர் மறுநாள் காலை 7 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டியில் அமைந்துள்ள அன்னை மரியா தேவாலயத்திற்கு வழிபாட்டிற்காக வந்தனர். தொடர்ந்து 9 மணியளவில் தேவாலயம் அருகே சமையல் செய்துள்ளனர். அப்போது பிராங்களின், ஆண்டோ, கிஷோர், கலைவேந்தன்,மனோகர் ஆகிய ஐந்துபேர் மட்டும் கோவில் அருகே ஓடும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றனர்.  இந்நிலையில் குளித்து கொண்டு இருந்த போது  எதிர்பாராதவிதமாக தண்ணீரின் வேகத்தில் ஒவ்வொருவராக தண்ணீரில் மூழ்கி உள்ளனர். வெகுநேரமாகியும் 5 பேரும் கரைக்கு வரவில்லை என்பதால் குளிக்க சென்றவர்களை தேடிக் கொண்டு ஜான்சனும் அவரது உறவினர்களும் ஆற்றுக்கு வந்துள்ளனர். 


முதல் நாள் மூன்று பேர் சடலமாக மீட்பு


அங்கு ஆற்றில் உள்ள மண் திட்டில் கலைவேந்தன் மற்றும் கிஷோர் இருவரும் இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து ஜான்சன் மற்றும் உறவினர்கள் அலறி கூச்சலிட்டனர்.  உடன் அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். தொடர்ந்து  திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.


உடன் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய  பிராங்களின், ஆண்டோ, மனோகர் ஆகிய மூவரையும் தேடினர். மேலும், திருவையாறு, தஞ்சாவூர் மற்றும் உள்ளூர் மீனவர்கள் என 40க்கும் மேற்பட்டவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில்  கொள்ளிடம் ஆற்றில் சற்று தூரத்தில் மனோகரை இறந்த நிலையில் மீட்டனர்.  ஆனால் பிராங்களின், ஆண்டோ ஆகிய இருவரின் நிலை என்ன ஆனது என்று தெரியாத நிலை இரவு வரை நீடித்தது. 


அண்ணன், தம்பி சடலமாக மீட்கப்பட்டனர்


இந்நிலையில் நேற்று மீண்டும் அண்ணன், தம்பிகளை தேடும் பணி தீவிரம் அடைந்தது. இதில் வெகு நேரத்திற்கு பின்னர் பிராங்களின் மற்றும் ஆண்டோ ஆகிய இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அண்ணன், தம்பி மற்றும் அவர்களின் நண்பர்கள் என மொத்தம் 5 பேர் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலும், இரங்கலும் தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.