தஞ்சாவூர்: எழுதி வைத்துக் கொள்ளுங்கள் வரும் 2025ம் ஆண்டு டிசம்பருக்குள் அ.தி.மு.க., ஒற்றுமையாகும். 2026ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும் என்று தஞ்சாவூரில் ஓ.பி.எஸ்., ஆதரவாளரும், ஒரத்தநாடு எம்.எல்.ஏ.,வுமான வைத்திலிங்கம் தெரிவித்தார்.


அதிமுக ஒன்றாக இணைய வேண்டும்


இதுகுறித்து அவர் தஞ்சையில் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:  அ.தி.மு.க., தொண்டர்கள் 99.9 சதவீதம் பேர் கட்சி ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்புகின்றனர். வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலிலதா ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என நினைக்கின்றனர். அந்த எண்ணத்தை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆத்மாக்கள் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.


ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா?


எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட யாரையும் நாங்கள் இழக்க விரும்பவில்லை. ஆனால், அ.தி.மு.க., இணைய கூடாது என நினைக்காதவர்கள், விரும்பாதவர்கள் தானாகவே அ.தி.மு.க.,வை விட்டு வெளியேறி விடுவார்கள். இது காலத்தின் கட்டாயம். ஒற்றை தலைமையா?, இரட்டை தலைமையா? என்பது அ.தி.மு.க., இணையும் போது முடிவுக்கு வரும்.


2025ம் ஆண்டு டிசம்பருக்குள் அ.தி.மு.க., ஒற்றுமையாகும். 2026ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். கடந்த நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளை கொண்டு தான், அவர் அ.தி.மு.கவை அழித்து விடுவார் என டிடிவி. தினகரன் கருத்து தெரிவித்தார். உண்மையும் அதுதான்.


150 இடங்களில் வெற்றி பெறும் என ஏமாற்றினார்


கடந்த 2021ம் ஆண்டில் அ.ம.மு.க., தே.மு.தி.க.வை அ.தி.மு.க., கூட்டணியில் சேர்க்க வேண்டும் என நானும், நத்தம் விசுவநாதனும் வற்புறுத்தினோம். அன்றைக்கு அ.தி.மு.க., தனித்து நின்றே 150 இடங்களில் வெற்றி பெற்று விடலாம் என எடப்பாடி பழனிசாமி கூறி எல்லோரையும் ஏமாற்றினர். லோக்சபா தேர்தலிலும் பெரிய மகா கூட்டணி உருவாகும் நாம் 40 சதவீதம் வெற்றி பெற்று விடலாம் என கூறினார். ஆனால் 20 சதவீதம் அளவுக்கு இன்றைக்கு மோசமான நிலைக்கு அ.தி.மு.க.,வை பழனிசாமி கொண்டு வந்துள்ளதை நினைத்து தினகரன் கருத்து தெரிவித்து இருப்பார்.


அ.தி.மு.க.,வை ஒன்றிணைக்க சசிகலா சுற்றுப்பயணம் செய்கிறார். சசிகலா  எடப்பாடி பழனிசாமி, தினகரன், ஓபிஎஸ் என அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது ஒவ்வொரு தொண்டனின் எண்ணம். இவ்வாறு அவர் கூறினார்.