தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த ராஹத் தனியார் பஸ் நிறுவன முறைகேட்டில் உரிமையாளருக்கு உடந்தையாக செயல்பட்ட ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



தஞ்சாவூர் அருகே ரஹ்மான் நகரைச் சேர்ந்தவர் கமாலுதீன். ராஹத் பஸ் டிரான்ஸ்போர்ட் என்ற பேருந்து நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தனது நிறுவனத்தில்  தொழிலில் முதலீடு செய்தால், அதிகளவில் லாபம் தருவதாக கூறி, மாநிலம் முழுவதும்  ஏஜென்ட் மூலம் பலரிடம் சுமார் ஒரு லட்சம் முதல்10 லட்சம் வரை கமாலுதீன் வசூல் செய்துள்ளார். ஒரு பேருந்துக்கு 16 பேரை  முதலீடு செய்ய வைத்துள்ளார். அதில் வரும் வருமானத்தை பேருந்து பராமரிப்பு, ஓட்டுநர் ஊதியம், உள்ளிட்ட செலவுகள் போக, மீதி வரும் லாபத் தொகையை சரிபங்காக, 16 பேருக்கு பிரித்துக் கொடுக்கப்படும் என ஒப்பந்தம் போட்டுள்ளார்.

இதனை அடுத்து தஞ்சாவூர் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் சிறுக சிறுக சேர்த்த பணத்தை முதலீடு செய்துள்ளனர். மேலும் முதலீடு செய்தவர்களுக்கு மாதம் 2 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை லாப தொகையை வழங்கியுள்ளார். தொடக்கத்தில் லாப பணத்தை முறையாக வழங்கியதால்,  முதலீடு செய்தவர்கள் தங்கள் உறவினர்களையும் முதலீடு செய்ய வைத்துள்ளனர்.

இந்நிலையில் இரண்டு ஆண்டாக முதலீடு செய்தவர்களுக்கு லாப தொகையை வழங்காமல், கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி சமாளித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ராஹத் தனியார் பஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கமாலுதீன் இறந்து விட்டார். தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தில் பங்கு தொகை வழங்கப்படவில்லை. இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் உரிமையாளரின் மனைவி மற்றும் மகன்களிடம் சென்று தங்களின் முதலீட்டுத் தொகையை திரும்ப தருமாறு வலியுறுத்திய போது ராஹத் பஸ் கம்பெனிக்கும் எங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துவிட்டனர்.

இதையடுத்து ராஹத் பஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதையடுத்து தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கு திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.

இவ்வழக்கின் விசாரணையில் ராஹத் பஸ் நிறுவன உரிமையாளர் கமாலுதீனுக்கு உடந்தையாக செயல்பட்டதாக அலுவலக ஊழியர்கள் முகமது சுபாந்தரியோ (56), முகமதுரபிக் (46), முகமது சாதிக் (57) ஆகிய 3 பேரையும் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து மேற்கண்ட 3 பேரையும் திருச்சி பொருளாதார குற்றபிரிவு டிஎஸ்பி., லில்லி கிரேஸ் கைது செய்து சிறையில் அடைத்தார்.