தஞ்சாவூர்: ஆஸ்துமா என்பது குணப்படுத்தக்கூடிய நோய்தான். ஆனால் சிலரிடம் ஆஸ்துமா பற்றி தவறான புரிதல் உள்ளது. அவர்களுக்கு ஆஸ்துமா குறித்து போதிய விழிப்புணர்வு தேவை என்று தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் தெரிவித்தார்.


உலக ஆஸ்துமா தினம்


உலக ஆஸ்துமா தினம் என்பது உலகளவில் ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் செவ்வாய்கிழமையன்று நினைவுகூரப்படும் ஒரு உலகளாவிய சுகாதார நிகழ்வாகும். அவரது 2024 ஆம் ஆண்டு உலக ஆஸ்துமா தினம் மே 7 ஆம் தேதி (செவ்வாய்கிழமை) அனுசரிக்கப்படுகிறது . இந்நாளில், குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே பரவும் முக்கிய உலகளாவிய தொற்றாத நோயை எதிர்த்துப் போராட பல்வேறு உலகளாவிய மற்றும் உள்ளூர் அமைப்புகள் ஒன்றிணைந்து முன்னேறுகின்றன.


இந்த ஆண்டு, 2024, உலக ஆஸ்துமா தின தீம் " ஆஸ்துமா கல்வி அதிகாரமளிக்கிறது " என்பதாகும். இந்த தீம் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் நோயை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் எப்போது மருத்துவ உதவியை நாடுவது என்பது பற்றிய கல்வியின் அவசியத்தை வலியுறுத்துகிறது. உலகளாவிய இறப்பு மற்றும் நோயுற்ற விகிதங்களைக் கட்டுப்படுத்தும் விரிவான ஆஸ்துமா மேலாண்மை திட்டங்களை உருவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் அனைத்து வள நாடுகளையும் ஊக்குவிக்க GINA பாடுபடுகிறது.


மனிதசங்கிலி நடந்தது


அந்த வகையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுரையீரல் மருத்துவத்துறை சார்பில் இன்று உலக ஆஸ்துமா தினவிழாவை முன்னிட்டு ஆஸ்துமா நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.


பின்னர் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் தலைமையில் நுரையீரல் மருத்துவத்துறை, பொது மருத்துவ துறை மாணவ, மாணவிகள் மற்றும் டாக்டர்கள் பங்கேற்ற மனித சங்கிலி நடந்தது. தொடர்ந்து மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:




1500 வெளி நோயாளிகளுக்கு ஆஸ்துமா சிகிச்சை


தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாதத்திற்கு சுமார் 1500 வெளி நோயாளிகளுக்கு ஆஸ்துமா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்துமா நோயை  ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால் முற்றிலும் குணப்படுத்தலாம். ஆஸ்துமா என்பது குணப்படுத்தக்கூடிய நோய்தான். ஆனால் சிலரிடம் இதுகுறித்த தவறான புரிதல் உள்ளது. அவர்களுக்கு ஆஸ்துமா குறித்து போதிய விழிப்புணர்வு தேவை. தூசு, புகைப்பிடித்தல், கெமிக்கல் போன்றவற்றில் ஒவ்வாமை ஏற்படுபவர்களுக்கு ஆஸ்துமா ஏற்படும். மூச்சு விடுவதில் அடிக்கடி சிரமம் ஏற்பட்டால் அவர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர் என்பதை எளிதாக கண்டுபிடித்து விடலாம்.


பனிக்காலம் மட்டுமின்றி கோடை காலத்திலும் ஆஸ்துமா தாக்கும். புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதனை உடன் கைவிட வேண்டும். நாம் தான் கவனமாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஆஸ்துமாவுக்கு தற்போது பல நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. அதனால் யாரும் கவலைப்பட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.


இதில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராமசாமி, நிலைய மருத்துவர் செல்வம், நுரையீரல் மருத்துவப் பிரிவு துறை தலைவர் அன்பானந்தன், பொது மருத்துவப் பிரிவு துறை தலைவர் கண்ணன், பதிவாளர் மணிமாறன், நுரையீரல் மருத்துவப் பிரிவு உதவி பேராசிரியர்கள் ராமசாமி ,நடேஷ், கிருபானந்தம் மற்றும் துறை பேராசிரியர்கள் ,உதவி பேராசிரியர்கள், செவிலியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.