தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணி கடந்த ஜூன் மாதம் விதை தெளித்து, 30 நாட்களுக்கு பிறகு நாற்றுக்களை பறித்து நடவு செய்து,  செப்டம்பர் மாதம் இறுதியில் அறுவடை நடைபெற்றது.  தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த குறுவை சாகுபடி சுமார் 1 லட்சம் ஏக்கரிலும், சம்பா-தாளடி நெற்பயிர்கள் சுமார் 2 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெற்றுள்ளது. இந்நிலையில், குறுவை நெற்பயிர்களில் அறுவடை செய்யப்பட்ட வைக்கோல்கள், வெளி மாவட்டத்திற்கு, கூடுதல் விலை விற்பனை செய்யப்பட்டதால், தற்போது தஞ்சை மாவட்டத்தில் வைக்கோல்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.தஞ்சை மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் வைக்கோல்களை மாடுகள் சாப்பிட்டால், மாடுகள், அதிக பால் கொடுப்பதுடன்,மாடுகளுக்கு ஊட்டமாக இருக்கும். இதனால் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, கோயம்புத்துார், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள், குறுவை அறுவடை நேரத்தில் வந்து, அறுவடை முடிந்த பிறகு, வைக்கோல்களை கூடுதல் விலை கொடுத்து வாங்கி செல்கின்றார்கள். பின்னர் அவர்கள், அப்பகுதியில் அதிக  விலையில்  வைக்கோல்களை வாங்கி, கால்நடைகளுக்கு தீவணமாக கொடுக்கின்றனர்.




மேலும், பேப்பர் தயாரிப்பதற்கும், காளான்கள் வளர்ப்பதற்கும் விலைக்கு வாங்கி கொண்டு செல்கிகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் வைக்கோல்களில் பேப்பர் தயாரித்தாலும், உணவுக்காக காளான்கள் வளர்த்தாலும் ருசியாகவும், தரமாக இருக்கும் என்பதால், வருடந்தோறும் அம்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வாங்கி செல்கின்றனர்.இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் வைக்கோல்கள் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வைக்கோல்கள் கட்டின் விலை ரூ. 100 விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு கட்டின் விலை 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வைக்கோல்கள் கிடைப்பது அரிதாகியுள்ளது. இதனால், பெரும்பாலான மாட்டின் உரிமையாளர்கள், வைக்கோல்கள் தட்டுப்பாட்டினால் மாடுகள் மற்றும் அதன் கன்றுகள் மெலிந்து, உடல்நலக்குறை ஏற்பட்டு விடுவதால், மாடு மற்றும் கன்றுகளை, இறைச்சிக்காக கேரளா மாநிலத்திற்கு லாரி மூலம் குறைந்த விலைக்கு அனுப்பி வைக்கின்றார்கள். இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் மாடுகளின் எண்ணிக்கை முழுவதும் குறைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.




இது குறித்து மாடு தரகர் கூறுகையில்,வைக்கோல்களை வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வாங்கி செல்வதால், இங்குள்ள மாடுகளுக்கு வைக்கோல்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வைக்கோல்கள் வாங்கி கொள்ளலாம் என அலட்சியமாக இருக்கும் நிலையில், தற்போது ஒரு கட்டு ரூ. 300 க்கு விற்பனை செய்தாலும் தட்டுப்பாடாக இருக்கின்றது. கிராமங்களில் வீட்டின் மாடியில் தார்படுதாவை போட்டு மூட,தங்கத்தை போல் பாதுகாத்து வருகின்றார்கள்.திருவையாறு தாலுக்காவில் உள்ள கிராமங்களில் மாடுகளை வைத்துள்ள விவசாயிகள், மாடுகளுக்கு போதுமான உணவு கிடைக்காததால், அதன் உடல்கள் மெலிந்து, பால் கறவை நின்று விடுகிறது. இதனால் கன்றுகள் பால் கிடைக்காமல் உடலநலக்குறைவு ஏற்பட்டு, பெரும் சிரமத்திற்குள்ளாகி விடுகிறது. இதனால் பெரும்பாலானோர், மாடுகளை இறைச்சிக்காக கேரளா மாநிலத்திற்கு லாரி மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து விடுகிறார்கள்.


இதே போல் தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மாடுகளை திரிந்தால் உரிமையாளருக்கு அபராதமும், மாவட்ட நிர்வாகம் பிடிக்கும் மாடுகளை கோசாலைக்கு அனுப்பி விடுகிறார்கள்.இதனால், தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் திரியும் மாடுகளையும் இறைச்சிக்காக கேரளா மாநிலத்திற்கு, மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.தஞ்சாவூர் மாவட்டத்தில் வைக்கோல்கள் தட்டுப்பாட்டினாலும், போதுமான உணவு கிடைக்காததாலும், சாலைகளில் திரியும் மாடுகளை, உரிமையாளர்கள், மாடுகளை கட்டுவதற்கு இடமில்லாததால், வாரத்தில் மூன்று நாட்கள், 10க்கும் மேற்பட்ட லாரிகளில் இறைச்சிக்காக, மாடுகளை கேரளா மாநிலத்திற்கு கொண்டு செல்வது வேதனையான விஷயமாகும் என்றார்.