ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் ராஜராஜ சோழன் கொண்டு வந்த அற்புதமான திட்டம்தான் இது. சரிங்க அதுக்கு முன்னாடி நந்தா விளக்கு பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சுக்குவோம். சாவா மூவா பேராடுகள் திட்டத்திற்கு நந்தா விளக்குகள்தான் அஸ்திவாரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.



நந்தா விளக்கு என்றால் விளக்கின் திரி தூண்டாமல் இரவும் பகலும் அணையாமல் எரியும் விளக்கு என்று பொருள். இவ்வகை விளக்குகள் நுந்தா விளக்கு, திருநுந்தா விளக்கு, நொந்தா விளக்கு, தூண்டாமணி விளக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளன. சாவா மூவா பேராடுகள் என்றால் சாவினாலோ, மூப்பினாலோ எண்ணிக்கை குறையாத ஆடுகள் என்று பொருள்.

முதலாம் ராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் நடந்த நிகழ்ச்சிதான் சாவா மூவா பேராடுகள் திட்டம் உருவாக வழிவகுத்தது. தஞ்சை பெரிய கோயில், சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் உள்ள சோழர்கள் காலக் கல்வெட்டுகளில் நந்தா விளக்கு பற்றிய தகவல்கள் உள்ளன.


தஞ்சாவூர் பகுதியில் வாழ்ந்த செல்வ செழிப்புள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மனக்கவலையில் வாடினார். தன் பிரச்னை தீர்ந்தால், தான் தினமும் சென்று வழிபடும் தஞ்சை பெரிய கோயிலில் நந்தா விளக்கு ஏற்ற நிதி அளிப்பதாக வேண்டிக் கொண்டார். சில மாதங்களில் அவர் பிரச்னை நீங்க கோயில் அலுவலரைச் சந்தித்துத் தனது வேண்டுதலைச் கூறி பத்தாயிரம் பொற்காசுகள் கொடுக்க இந்தத் தகவல் மன்னன் ராஜராஜ சோழன் கவனத்துக்குச் செல்கிறது. அந்தச் செல்வந்த பெண்மணியிடமிருந்து பொற்காசுகளைக் கோயில் சார்பில் ராஜராஜ சோழனே பெற்றுக்கொண்டார்.

அடுத்த நொடியே அமைச்சரை அழைத்து, ‘இந்த ஊரில் மிகவும் வறுமையில் வாடும் நபர் இருந்தால் அழைத்து வாருங்கள்’ என்று கட்டளையிட்டார். அந்த ஊரில் வறுமையில் வாடிய ஒருவரை அரசர் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். உடன் பொற்காசுகள் மூட்டை ஒன்றை வறுமையில் வாடியவருக்கு ராஜராஜ சோழன் கொடுப்பார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், நடந்தது வேறு.

கோயில் அலுவலரை அழைத்த அரசர், ‘‘தினமும் உண்ணாழிகையில் விளக்கெரிக்க, எவ்வளவு நெய் தேவை’’ என்றார். ‘‘ஒரு ஆழாக்குத் தேவைப்படும்’’ என்றார் அலுவலர். அடுத்து, கால்நடை வளர்ப்பில் அனுபவம் கொண்ட அமைச்சர்களிடம் ஆலோசனை செய்துவிட்டு, ‘‘செல்வந்த பெண்மணி கொடுத்த கோயில் நிதியிலிருந்து வறுமையில் வாடும் அந்த மனிதருக்கு 96 ஆடுகளை வாங்கிக் கொடுங்கள். அதில் கிடா, பெட்டை, குட்டிகளும் அடக்கம். இந்த ஆடுகளின் பால்மூலம் கிடைக்கும் நெய்யைத் தினமும் ஒரு ஆழாக்கு கோயிலுக்குக் கொடுத்துவிட வேண்டும். இந்த 96 ஆடுகளும் சில ஆண்டுகளில் பல்கிப் பெருகிவிடும்.

அதற்குள் இவர் வறுமை நீங்கி வளம் பெற்றுவிடுவார். இவர் மீண்டும் 96 ஆடுகளைக் கோயிலுக்குக் கொடுக்க வேண்டும். அவை மற்றொருவருக்கு வழங்கப்படும். அந்த ஆடுகளைப் பெற்றுக் கொண்டவர் கோயிலுக்கு நெய் கொடுக்க வேண்டும். இவர் வளர்ச்சி அடைந்தவுடன் வேறு ஒருவருக்கு, அடுத்து மற்றொருவருக்கு என இந்தத் திட்டம் விரியட்டும். இதன் மூலம் நாட்டில் வறுமையில் வாடுபவர்களே இல்லாத நிலை உருவாகட்டும்’’ என ராஜராஜ சோழன் அறிவித்தார்.

இது ஆதாரம் இல்லாமல் சொல்லப்பட்ட தகவல் அல்ல. சாவா மூவா பேராடுகள் குறித்து ஏராளமான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பேராடுகள் திட்டம் போலவே, பெரும் பசுக்கள் திட்டமும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டது.

‘‘தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் ஆலயம் என்னும் ராஜராஜேஸ்வரத்தை எழுப்பிய முதலாம் ராஜராஜசோழன் அக்கோயிலில் பல்லாயிரக்கணக்கான திருவிளக்குகள் எரிய ஆட்டுப் பண்ணைகளையும், பசுப் பண்ணைகளையும், எருமைப் பண்ணைகளையும் நிரந்தர முதலீடாகப் பல்வேறு ஊர்களில் அமைத்து பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்வுக்கு வழி செய்ததோடு, அவ்விளக்குகள் எரிய தேவைப்படும் நெய்யை மட்டும் அப்பண்ணையைப் பராமரிப்பவர்கள் அளிக்க வகையும் செய்தார்.

தான் அளித்த ஆவினங்களின் எண்ணிக்கை, அந்தப் பண்ணையில் என்றென்றும் குறையக் கூடாது. நோய் காரணமாகவோ, முதுமையின் காரணமாகவோ ஆடு அல்லது பசு இறந்து போகுமானால், அதற்குப் பதிலாக இன்னோர் ஆட்டையோ பசுவையோ பண்ணையைப் பராமரிப்பவர்கள் ஈடு செய்ய வேண்டும். இந்த எண்ணிக்கையை அவ்வப்போது அரசு அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து அறிக்கையை அரசனுக்குச் சமர்ப்பிப்பார்கள். அவ்வாறு அமைக்கப்பட்ட பண்ணைகள் சந்திரன், சூரியன் உள்ளளவும் அழியாமல் செயல்பட வேண்டும் என்பதே ராஜராஜசோழனின் நோக்கம்.

இதற்காக அளிக்கப்பட்ட ஆடுகளையும், பசுக்களையும் சாவா மூவா பேராடுகள் என்றும், சாவா மூவா பெரும் பசுக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். தஞ்சைக் கோயிலில் அவர் வைத்த ஒரு விளக்குக்காகப் பலன் தரும் 48 பசுக்களைச் சிறுகுளத்தூரில் இருந்த புளியன் சூற்றி என்பவரிடம் ஒப்படைத்தான் என்று தஞ்சைக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.

ராஜராஜ சோழன் மூலம் உருவாக்கப்பட்ட இந்தச் சாவா மூவா பேராடுகள் பெரும் பசுக்கள் திட்டம் ராஜேந்திர சோழன் காலத்தில் அவர் ஆட்சிப் பகுதி முழுக்கச் செயல்படுத்தப்பட்டன. அதன் பிறகு நாயக்கர் ஆட்சி, மராட்டியர் ஆட்சி, ஆங்கிலேயர் ஆட்சி என மாறி மாறி வந்தபோதும், தஞ்சைப் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு மட்டும் நெய் வழங்க கால்நடைகள் வளர்க்கும் திட்டம் செயல்பட்டுள்ளது.