தஞ்சாவூா்: தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் தஞ்சாவூரில் குடிநீர் வராததை கண்டித்து, சேவப்பநாயக்கன்வாரி பகுதியை சேர்ந்த பொது மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசிக்கின்றனர்


தஞ்சாவூா் மாநகராட்சி 20-வது வார்டுக்கு உட்பட்ட சேவப்பநாயக்கன்வாரி மேல்கரை, வடகரை, கிரி ரோடு, ராஜாஜி ரோடு, பிரதாபசிம்மபுரம், ராஜன் ரோடு ஆகிய பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு மாநகராட்சி சார்பில் குழாய் மூலம் வீடுகளுக்கு தினமும் காலை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.


ஒருவாரமாக குடிநீர் விநியோகம் இல்லை


கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து மாநகராட்சி 20-வது வார்டு உறுப்பினர் சரவணன் புகார் தெரிவித்தார். ஆனால் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து கேட்டும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.


மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் தலைமையில் மறியல்


இந்நிலையில் மீண்டும் குடிநீர் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன், மாமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் தலைமையில் சீனிவாசபுரம் கிரி ரோட்டில் காலிக் குடங்களுடன் திரண்டனர். பின்னர், சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.


அதிகாரிகள் பேச்சுவார்த்தை


இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள், மேற்கு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பொதுமக்கள் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர் பொதுமக்கள், எங்கள் பகுதியில் வீடுகளுக்கு ஊதா  கலர் குழாய் பொருத்திய பிறகு குடிநீர் வினியோகம் சீராக இல்லை. சில நிமிடங்கள் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது ஒரு வாரமாக சுத்தமாக தண்ணீர் வரவில்லை. இதனால் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறோம்.


எனவே பழைய முறையில் குழாய் பொருத்த வேண்டும். தினமும் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். குடிநீர் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறோம். இதனால் வெகுதூரம் வாகனங்களில் சென்று எடுத்து வரும் நிலை உள்ளது. இப்போது ஒரு வாரத்திற்கும் மேல் குடிநீர் வரவில்லை. எங்கள் நிலை மிகவும் மோசமாக என்று தெரிவித்தனர்.


அதிகாரிகள் அளித்த உறுதிமொழி


தொடர்ந்து அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடுங்கள். தற்போது லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்கிறோம். இந்த பிரச்னைக்கு உடனே நடவடிக்கை எடுத்து சரி செய்து தருகிறோம் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக் கொண்டு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணிநேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.