தஞ்சாவூர்: 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்ணாடி பாட்டில்களை கொசுப்புழுகள் உற்பத்தியாகும் வகையில் குவித்து வைத்திருந்த தனியார் நிறுவனத்திற்கு தஞ்சாவூர் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து அந்த பாட்டில்கள் அனைத்தும் அகற்றப்பட்டதை மாநகராட்சி அலுவலர்கள் உறுதி செய்தனர்.


குவியல், குவியல்களாக கண்ணாடி பாட்டில்கள்


தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 14 கோட்டங்களிலும் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி அறிவுறுத்தலின்படி டெங்கு கொசுப்புழு ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்ற வாரம் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியினை மாநகர்நல அலுவலர் டாக்டர் வீ.சி. சுபாஷ்காந்தி வார்டு எண் 27க்கு உட்பட்ட ஆடக்காரத் தெருவில் நேரடி ஆய்வு மேற்கொண்டபொழுது மூடப்பட்டிருந்த தனியார் கண்ணாடி பாட்டில் நிறுவனத்தில் 50000க்கும் மேற்பட்ட கண்ணாடி பாட்டில்கள் கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் குவித்து வைத்திருந்தனர். 





உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது


உடனடியாக அப்புறப்படுத்த தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939ன் படி உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக குவித்து வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பாட்டில்கள் முழுவதும் லாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டிருந்ததை மீண்டும் ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்யப்பட்டது. மேலும் தஞ்சாவூர் மாநகராட்சிகுட்பட்ட பகுதிகளில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் மூடி போடாமல் டிரம்களில் மற்றும் கலன்களில் தண்ணீர்கள் நிரப்பி வைப்பது, டயர்கள், டீ கப்புகள், கொட்டாங்குச்சிகள் போன்றவற்றில் மழைநீர் தேங்கி முட்டையிட்டு, அதிலிருந்து உருவாகும் கொசுக்கள் டெங்கு காய்ச்சலைப் பரப்புகின்றன.


சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும்


மேலும் வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்திடவும் டெங்கு கொசுவை பரப்பும் ஏடிஸ் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமலும் அதற்கு கட்டிடத்தின் அருகாமையில் தேங்காய் ஓடுகள், உரல்கள், உடைந்த பிளாஸ்டிக் சாமான்கள், உபயோகமற்ற டயர்கள் ஆகியவற்றை அகற்றிடவும் செடி வளர்க்கும் தொட்டிகளில் நீர் தேங்கி நிற்காமல் பராமரித்திடவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் டெங்கு கொசுவை பரப்பும் ஏடிஸ் கொசு சாக்கடை நீரில் வளராது. தூய தண்ணீரில் மட்டுமே வளரும். இக்கொசு பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கும். வீட்டின் உட்புறங்களில் உள்ள பிரிட்ஜ் டிரேயில் இருக்கும் நல்ல தண்ணீரில் ஏடிஸ் கொசு முட்டையிட்டு கொசு உற்பத்தியாகும் வாய்ப்பு உள்ளது.


ஏர்கூலர்களை தூய்மையாக துடைத்து வைக்க வேண்டும்


வீட்டில் சமையல் மற்றும் குடிநீருக்கு பிடித்து வைக்கப்படும் தண்ணீரின் கலன்களை மூடி வைத்து பராமரித்திடவும், அதனை அடிக்கடி மாற்றிடவும் தெரிவிக்கப்படுகிறது. வீடுகளில் வளர்க்கப்படும் மணி பிளான்ட் செடிகளில் தண்ணீர் ஊற்றி வளர விடுகிறோம், அந்த தண்ணீரில் இந்த கொசு வளரும் வாய்ப்பு உள்ளது. ஏர்கூலர் தண்ணீரில் இந்த கொசு வளரும் வாய்ப்புள்ளது. எனவே ஏர்கூலர் இருக்கும் அறைகளில் கொசு முட்டை நிச்சயம் இருக்க வாய்புள்ளது. மழைகாலங்களில் ஏர்கூலரை அடிக்கடி துடைத்து தண்ணீரை மாற்ற வேண்டும். வீட்டின் அருகாமையில் தேவையற்ற செடி, கொடிகள் புல், பூண்டுகளில் கொசுக்கள் தங்கிக் கொள்ளும் என்பதனால் அந்த இடங்களை சுத்தமாக பராமரித்திட வேண்டும்.


அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை


குப்பைகளை மழை நீர் வடிகால்களில் கொட்டாமலும் வடிகாலினை தேக்கமின்றி பராமரித்திடவும், கட்டிடத்தின் மேல்தளங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்கி நிற்காமலும் மற்றும் கழிவுநீர் தேங்கி நிற்காமலும் பராமரித்திடவும் தெரிவிக்கப்படுகிறது. இதுபோல டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் கலன்கள் திறந்த வெளியில் போடப்பட்டிருந்ததால் அந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என தஞ்சாவூர் மாநகராட்சி மூலம் தெரிவிக்கப்படுகிறது.