ஊரடங்கில் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் வெளியில் சுற்றியவர்களை பிடித்து சீர்காழியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.




நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி மக்களுக்கு பொருளாதார ரீதியாகவும், உயிரிழப்புகள் என பெரும் இன்னல்களை ஏற்படுத்திய வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இருந்து மக்கள் மீள தடுப்பூசி ஒன்றே தீர்வு என அரசு அறிவித்து, அனைவரையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இதன் காரணமாக மருந்தகங்கள், உணவகங்கள், பால் கடைகள் தவிர்த்து ஏனைய அனைத்து கடைகளும் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.




இந்நிலையில் ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 29 ஆயிரத்தி 95 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 23 ஆயிரத்து 209 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 5 ஆயிரத்து 463  நபர்கள் மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், தரங்கம்பாடி, சீர்காழி, புத்தூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 336 நபர்கள் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் பத்து பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகியுள்ள நிலையில் புதிதாக 717 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமலும், கொரோனா அச்சமின்றி பலரும் சீர்காழி நகர் முழுவதும் தொடர்ந்து ஏராளமானோர் சுற்றி வருகின்றனர். இவர்களுக்கு காவல்துறையினர் பலமுறை அறிவுரை வழங்கியும், அபராதங்கள் விதித்தும் மீண்டும் மீண்டும் இவர்கள் வெளியில் சுற்றி திரிகின்றன. இதனை அடுத்து  தென்பாதி உப்பனாறு பாலம் அருகே காவல்துறையினர் சோதனைச் சாவடி அமைத்து தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றியவர்களை பிடித்து மருத்துவ குழுவினருடன் இணைந்து கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டனர்.




இதில் தேவையின்றி சுற்றித்திரிந்த இளைஞர்கள், பெரியவர்கள், பெண்கள் என 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனையை  திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு தேவையின்றி வெளியே வரவேண்டாம் எனவும் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் மருத்துவத்துறை சார்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டது.


கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தொடர்வது மக்கள் கையில் தான் உள்ளது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துவரும் நிலையில், இது போன்று தேவை இன்றி வெளியில் சுற்றி கொரோனா வைரஸை பரப்பும் நபர்களால் தொற்றும் குறையாமல், ஊரடங்கும் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக இப்பகுதி சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


''உடைந்த கூரையை ஓனர் சரிசெய்யவில்லை'' - கான்கிரீட் இடிந்து விழுந்து இளம்பெண் உயிரிழப்பு!