தஞ்சாவூர்: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மேயர் சண்.ராமநாதன் எடுத்த நடவடிக்கை பெண்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

Continues below advertisement

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது. போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன என்று புகார்கள் மாநகராட்சி மேயர் மற்றும் நிர்வாகத்தினருக்கு வந்தது. இதையடுத்து இன்று தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் மேயர் சண்.ராமநாதன் திடீரென ஆய்வு செய்தார்.

அப்போது நடைமேடையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்திருந்த வியாபாரிகளிடம் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கடைகளை அமைக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், நடைமேடைகளில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆக்கிரமிப்புகளை 3 நாட்களுக்குள் வியாபாரிகள் அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Continues below advertisement

பயணிகள் நடந்து செல்லக்கூட இடமில்லாத நிலை உள்ளது என்று தெரிவிக்கின்றனர். மக்களுக்கு இடையூறாக இருக்கவே கூடாது என்று வியாபாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது பஸ்சுக்காக காத்திருந்த மாணவர்களிடம் நீங்கள் எந்த பள்ளியில் படிக்கிறீர்கள்? காலதாமதம் ஆகி விட்டது. இன்னும் பள்ளிக்கு செல்லவில்லையா? என விசாரித்தார். பின்னர் கல்விதான் அசைக்க முடியாத செல்வம். எனவே நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். 

மேயர் சண்.ராமநாதன் ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ளதை கண்ட சில பெண்கள் வேகமாக வந்து அவரிடம் தயங்கியபடியே நின்றனர். உடன் அவர்களை பார்த்த மேயர் சண். ராமநாதன், என்ன விஷயம் சொல்லுங்கள் என்று தெரிவிக்க, அந்த பெண்கள் நாங்கள் தஞ்சையில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்க்கிறோம். நாங்கள் வெளியூரில் இருந்து இங்கு வேலைக்கு வருகிறோம்‌. எங்களுக்கு பணி இரவு 9 மணிக்கு முடிவடையும். அதன் பிறகு, நாங்கள் வீட்டிற்கு செல்வதற்கு நீண்ட நேரம் ஆகிறது. சில நேரத்தில் பஸ் இல்லாமல் மிகவும் அவதிக்குள்ளாகிறோம் என்று தெரிவித்தனர்.

அடுத்த நொடியே அந்த ஜவுளிக்கடையின் மேலாளரை மேயர் சண்.ராமநாதன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். வெளியூரில் இருந்து குடும்ப சூழலுக்காக பெண்கள் பணிக்கு வருகின்றனர். அவர்களை இரவு நேரத்தில் சீக்கிரமே வீட்டிற்கு அனுப்புங்கள். அவர்கள் பஸ் இல்லாமல் வீட்டிற்கு தாமதமாக செல்கின்றனர். உங்கள் நிறுவன உரிமையாளரிடம் தெரிவியுங்கள் என்று கூறி உடன் நடவடிக்கை எடுத்தார். சில நிமிடத்திலேயே அந்த ஜவுளி நிறுவன நிர்வாகத்தினர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து வெளியூரிலிருந்து வரும் பெண்களை இரவு 8 மணிக்கு பணி முடித்து வீட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று தகவல் தெரிவித்தனர். மேயர் சண்.ராமநாதனின் இந்த அதிரடி நடவடிக்கை பெண்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்தது.

தொடர்ந்து, அங்குள்ள கழிவறைக்குள் சென்று தூய்மையாக இருக்கிறதா? என பார்வையிட்டார். மேலும், பஸ் நிலையத்தின் அனைத்து பகுதிகளுக்கும் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மேயர் சண்.ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சை பழைய பஸ் நிலையம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக வந்த புகாரை அடுத்து இன்று காலை ஆய்வு செய்தோம். அப்போது நடைமேடையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்திருந்த வியாபாரிகளிடம் பயணிகள் நடந்து செல்ல இடையூறு ஏற்படாத வகையில் கடைகள் அமைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, வருகிற திங்கட்கிழமை இதேப்போல், ஆய்வுக்கு வருவோம். அப்போது அகற்றப்படாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேப்போல, நடைமேடைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், அங்குள்ள பொது கழிவறையால் அருகில் உள்ள மண்டபத்தில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, அந்த கழிவறையை வேறு இடத்திற்கு மாற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மாநகராட்சி துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி, 25-வது வார்டு கவுன்சிலர் தெட்சிணாமூர்த்தி, நகர் நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.