மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நேரத்தையும், நாட்களையும் வீணடிக்காமல் கிராமத்து சிறுவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு கம்புச் சண்டை உள்ளிட்ட தமிழர் மரபுக் கலைகளை இலவசமாக கற்றுத்தந்து கொண்டிருக்கிறார். சீர்காழியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சிலம்ப ஆசான் விமல். இவரது இடதுகை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் பறிபோனது. ஒரு கையை இழந்தாலும், தையிரியத்தையும், மன துணிச்சலை தளர விடாமல் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடு, தனது மூதாதையர்கள் விரும்பிய பண்டைய விளையாட்டு முறைகளில் கற்றுக் கொண்டு மற்றவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பண்டைய வீர கலைகள் இலவசமாக கற்றுக் கொடுத்து வருகிறார் சீர்காழியைச் சேர்ந்த ஒரு கையை இழந்த  மாற்றுத்திறனாளியான விமல்.




இவர் இந்த காலத்தில் வீட்டில் முடங்கி கிடக்கும் மாணவர் டிவி, செல்போன் ஆகியவற்றில் யூடியூப், பப்ஜி கேம் என விளையாட்டுகளை விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் உளவியல் ரீதியாக பெரியளவில் பாதிக்கப்படுகின்றனர். கண் பார்வையும் பாதிப்படைகிறது. இதையும் தாண்டி உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. இதனால் மாணவர்கள் உடல் ஆரோக்கியம் இல்லாமல் நோய்கள் எளிதில் தொற்றி விடுகிறது. பாரதியார் சொன்னது போல காலை முழுவதும் படிப்பு, மாலை முழுவதும் விளையாட்டு என்பது தற்போது உள்ள மாணவர்கள்  விளையாடுவது குறைந்து விட்டது டிவி, செல்போன் வந்ததிலிருந்து நமது பழமையான விளையாட்டுகளை மறந்து கொண்டே போய்விட்டனர். பெண்களுக்கு பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் இடத்திலும், தனியாக செல்லும் போது பாலியல் சீண்டல்களால் தைரியத்தை இழந்து உயிரிழப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது.




அதனை முன் வைத்தே சிலம்ப ஆசான் விமல் அதிகளவில் பெண் குழந்தைகளுக்கு இந்த தற்காப்பு கலையை கற்று கொடுத்து அவர்களுக்கு துணிச்சலை உருவாக்கி வருகிறார். மேலும், மாணவர்கள் இல்லங்களுக்கு சென்று இலவசமாக பண்டைய விளையாட்டு முறைகளை எடுத்துக்கூறுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் விமல். மாணவர்கள் வீட்டில் முடங்கி இருப்பதால் அவர்களுக்கு ஆரோக்கியம் உடல் வலிமை எதிர்ப்புசக்தியை உயர்த்தும் விதமாக மாணவர்களை தேடி அழைத்து வந்து தங்கியிருக்கும் இடத்தில் அருகாமையிலேயே விளையாட்டு மைதானத்தை உருவாக்கி அதில் பண்டைய விளையாட்டு முறைகளை கற்றுக்கொடுத்து வருகின்றார்.  சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், சட்டநாதபுரம், அகனி, புத்தூர், திருமுல்லைவாசல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் பண்டையகால வீர விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர்களுக்கு சிலம்பக்கலையில் அடிப்படையான குரங்குப் பாய்ச்சல், குத்துவரிசை, புலிவரிசை, அடிமுறை சிலம்பம், போர் சிலம்பம், அலங்கார சிலம்பம், மான்கொம்பு, சுருள், வாள் வீச்சு, வாள் கேடயம் போன்ற பல்வேறு பாரம்பரியக் கலைகள் அனைத்தையும் இலவசமாக கற்றுத் தருகிறார் மாற்றுத்திறனாளியான விமல்.




மேலும், தற்போது தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சதவீதம் இட ஒதுக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்து விதமாக அரசாணை பிறப்பித்துள்ளது. இருப்பினும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சிலம்பம் கலையை கற்றுதரும் விதமாக விளையாட்டில் பழமையான கலைகள் அழிவை தடுக்கும் விதமாக பாடத்தில் இணைத்து வேலை வாய்ப்பை தந்து மாற்றுத்திறனாளிகளின் வாழ்கை தரத்தை உயர்த்த தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.