மேட்டூர் அணையில் திறக்கப்படும் காவிரி தண்ணீர் விவசாய பயன்பாட்டிற்காக தங்கு தடை இன்றி செல்வதற்காக தமிழகம் முழுவதும் உள்ள வாய்க்கால்களை தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் தூர்வாரி வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நீர்வளத்துறை தூர்வாரும் திட்டப்பணிகள் 2023-24ன் கீழ் காவிரி ஆறு, மகிமலையாறு, மஞ்சளாறு, வீரசோழனாறு, மண்ணியாறு, அய்யாவையனாறு, விக்ரமனாறு,  மற்றும்  தெற்குராஜன் ஆறுகளில் பிரியும் வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள்  தூர்வாரும் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. 




தரங்கம்பாடி தாலுக்கா மேமாத்தூர் கிராமத்தில் வாழ்க்கை வாய்க்கால் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதன் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் 8.06 கோடி மதிப்பீட்டில் 749.74 கி.மீட்டர் தூரம் 51 தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து மாவட்ட விவசாயிகள் சிலர் கூறுகையில், “ஆண்டுதோறும் தமிழக அரசு தூர்வாரும் பணியினை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தூர்வாரும் பணி என்பது பெயரளவில் மட்டுமே பல கோடி ரூபாய் செலவில் செய்யப்படுகிறது.




அதனால் விவசாயிகளுக்கு எந்த ஒரு பயனும் இல்லை. ஒவ்வொரு முறையும் பிரதான வாய்க்கால்களான ஏ மற்றும் பி வாய்க்கால்கள் மட்டும் தூர் வாருகின்றனர். அதன் காரணமாக கிளை வாய்க்கால்களான சி மற்றும் டி வாய்க்கால்கள் பெருமளவு தூர்வாரமால் விட்டு விடுகின்றனர். இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு காவிரி நீர் கிடைக்காமல் தண்ணீர் வீணாக கடலில் சென்று கலந்து வருகிறது. அதுமட்டுமின்றி மழை காலத்தில் சி மற்றும் டி வாய்க்கால்கள் தூர்வாரமால் விட்டு விடுவதால் வடிகால் வசதியும் இன்றி மழை நீர் வடிய வழியின்றி பயிர்கள் ஆண்டு தோறும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது.




இது போன்ற பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சாலையோர உள்ள பிரதான வாய்க்கால்களை மட்டும் தூர்வாரி மக்களையும், விவசாயிகளையும் ஏமாற்றாமல், அனைத்து வாய்க்கால்களையும் முறையாக தூர்வாரி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என  வேண்டுகோள் வைத்து வருகின்றனர். இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிரதான பாசன வாய்க்காலான கழுமலையாறு உள்ளது. கொண்டல் பகுதியில் உருவாகும் இந்த கழுமலையாறு அகனி, கோயில்பத்து, சீர்காழி நகர், தாடாலன் கோயில், திட்டை, தில்லைவிடங்கன், சிவனார்விளாகம், திருத்தோணிபுரம், செம்மங்குடி உள்ளிட்ட 20 க்கு மேற்பட்ட கிராமங்களில் சுமார் 6000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும், சீர்காழி  நகர் பகுதியின் பிரதான மழை நீர் வடிகாலாகவும் கழுமலையாறு உள்ளது. 




இந்நிலையில் கழுமலை ஆறு தூர்வாரும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் கோயில்பத்து மற்றும் சீர்காழி நகர் பகுதியில் கழுமலை ஆற்றில் ஆங்காங்கே அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள சிறு பாலங்களாலும், நான்கு வழிச்சாலை பணிகளாலும்  முழுமையாக தூர்வார முடியாததால் நகர் பகுதியில் இருந்து மேலோட்டமாக தூர்வாரும் பணி நடைபெறுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், சீர்காழி அரசு மருத்துவமனை கழிவுநீர், நகர்புற குடியிருப்பு வளாக கழிவுநீர், தனியார் திருமண மண்டப கழிவுநீர்கள் கழுமலை ஆற்றில் விடப்படுவதால் தண்ணீர் மாசடைந்து வருவதாகவும் குற்றம் சாட்டும் விவசாயிகள், நகர்ப்பகுதியில் இருந்து முழுமையாக கழுமலையாறு ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என கோரி தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தினர்.




விவசாயிகள் நீண்ட நேரம் போராட்டம் நடத்தியும் பொதுப்பணித்துறை  அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு முன் வராததால் விவசாயிகள் தாங்களாக கலைந்து சென்றனர். ஆக்கிரமப்புகளை முறையாக அகற்றி முழுமையாக தூர்வாரினால் மட்டுமே தொடர்ந்து தூர்வார அனுமதிப்போம் எனவும் தெரிவித்து கலைந்து சென்றனர்.