முன்னறிவிப்பு இன்றி வழங்கப்பட்ட செறிவூட்டப்பட்ட அரிசி - பொதுமக்கள் பீதி

சீர்காழியில் செறிவூட்டப்பட்ட அரிசியை தடை செய்ய கோரி வட்டாச்சியரிடம் அரிசியை திரும்ப ஒப்படைத்து, விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Continues below advertisement

பொது விநியோகத் திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்குச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என அறிவித்து மத்திய அரசால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 உள்ளடக்கிய நுண்ணோட்டச்சத்து சேர்ந்து செறிவூட்டப்பட்ட மணிகளாக தயார் செய்து செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளை, சாதாரண அரிசியுடன் 1:100 என்ற விகிதத்தில் கலவை செய்து செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றி, பொதுவிநியோகத் திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

Continues below advertisement


இத்திட்டம் தமிழ்நாட்டில் கடந்த 21.09.2020 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அறிமுகத் திட்டமாக (Pilot Scheme) செறிவூட்டப்பட்ட அரிசியினைப் பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் வழங்க அறிவிக்கப்பட்டு 01.10.2020 முதல் 31.03.2022 வரை செயல்படுத்தப்பட்டது. இதனை மத்திய அரசு 3 நிலைகளாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு மாநிலம் முழுவதும் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டு, இந்திய உணவுக் கழகத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி பெறப்பட்டு ஐனவரி 2022 முதல் வழங்கப்பட்டு வருகிறது.



மத்திய அரசு நாடு முழுவதும் 112 மாவட்டங்களை முன்னோடி மாவட்டங்களாகத் தேர்வு செய்துள்ளது. அவற்றில் தமிழ்நாட்டில் விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களை முன்னோடி மாவட்டங்களாக மத்திய அரசு தேர்வு செய்தது. அந்த மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றிற்கு 01.12.2022 முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது.


மார்ச் 2024 -க்குள் மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசியைப் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்ப அட்டைதார்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மதிய உணவுத் திட்டம் மற்றும் பிற நலத்திட்டங்களுக்கு முழுமையாக வழங்கத் திட்டமிட்டுள்ளது. மார்ச் 2024 -க்குள் அனைத்து ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு திட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலமாக செறிவூட்டப்பட்ட அரிசியை இந்திய உணவுக் கழகத்திலிருந்து தற்போது பெறப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.


இரும்புச் சத்து மூலம் இரத்தச் சோகையைத் தடுக்கிறது,  ஃபோலிக் அமிலமானது கருவளர்ச்சிக்கும், ரத்த உற்பத்திற்கும் உதவுகிறது, வைட்டமின் பி12 ஆனது நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது. செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதால் இரும்புச் சத்து, ஃபோலிக்அமிலம் மற்றும் வைட்டமின் பி12 ஆகிய மூன்று நுண்ணோட்டச்சத்துக் குறைபாட்டினைப் போக்கி ரத்தச் சோகையில்லா நிலையினை உருவாக்கி ஆரோக்கியமாக வாழ உதவிகரமாக இருக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கின்றனர். 


இந்நிலையில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் வருகிற ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்ய உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா முழுவதுமாக முன் அறிவிப்பின்றி மறைமுகமாக 141 ரேசன் கடைகளில் ஜனவரி மாதம் முதல் செறிவூட்டப்பட்ட அரிசி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றும், இந்த அரிசி இயற்கைக்கு மாறாக இருப்பதால் எறும்பு கூட திண்ணாத நிலையில் ரசாயனம் கலந்து இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதாகவும், தண்ணீரில் அரிசியை கொட்டிய ஐந்து நிமிடத்தில் அரிசி உப்பி சோறு போல  மாறுகிறது இதனால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய வகையில் இருப்பதால், இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை தடை செய்து, ரேஷன் கடைகளில் வழங்குவதை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி சீர்காழியில் விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அதனைத் தொடர்ந்து, அவர்கள் ரேஷன் கடைகளில் வாங்கிய அரிசியினை சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமாரிடம் திரும்ப ஒப்படைத்தனர். மேலும், டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து இது போன்ற ரசாயனம் கலந்த அரிசியை வழங்குவதை அரசு முற்றிலும் நிறுத்தி டெல்டாவில் விளைய கூடிய நெல்லை அரிசியாக வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த தகவல் அறிந்த நாள் முதல் தமிழ்நாட்டில் அதுவும் குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து எதிர்ப்பு குரலும், அது சார்ந்த பல போராட்டங்களும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola