சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பணி ஆணை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருக்குவளை கலைஞர் இல்லம் முன்பாக நடைபெற்ற மக்கள் நலப் பணியாளர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் 5 பேர் மயக்கம் அடைந்தனர்.


திமுக ஆட்சி காலத்தில்,1989 ம் ஆண்டு பணியமர்த்தப்பட்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் மூன்று முறை பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நல பணியாளர்கள் தற்பொழுது திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திமுக தேர்தல் வாக்குறுதி படி பணி நியமன ஆணை வழங்க வேண்டும், காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும் , பணி நீக்க காலத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருக்குவளையில் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.



 

இருப்பினும் காவல்துறை அனுமதி மறுத்து திருக்குவளை கடைத்தெரு பகுதியில் போராட்டம்  நடத்திக் கொள்ளலாம் எனவும் , நாகை அவுரி திடலில் உண்ணாவிரத போராட்டம்  நடத்தலாமென நேற்று  பேசி  முடிக்கப்பட்டது.இருப்பினும், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி திட்டமிட்டபடி திருக்குவளையிலுள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த இல்லம் முன்பாக உண்ணாவிரத  போராட்டம் நடத்த தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் திரண்டனர்.



 

சுமார் 1000த்திற்கும் மேற்பட்டோர் சங்கத் தலைவர் செல்லப்பாண்டியன் தலைமையில்  போலீசாரின் தடுப்பையும் மீறி திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது . மேலும் கலைஞர் கருணாநிதி பிறந்த இல்லம்‌ முன்பாக அமர்ந்திருந்தவர்களை போலீசார் கலைந்து செல்ல வற்புறுத்தியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மாற்று இடத்தில் போராட்டம் நடத்த கோரியும் அதற்கு உடன்படாத போராட்டக்காரர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை விளக்கி கோஷங்களை எழுப்பினர்.

 

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் நல பணியாளர்களில்  கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியைச் சேர்ந்த பொற்கொடி, செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் சேர்ந்த செங்கனி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த  மகேஸ்வரி , மரகாணத்தைச் சேர்ந்த பரமேஸ்வரி ,தென்காசி மாவட்டம் மேலநீதிக்கநல்லூரை சேர்ந்த துளசியம்மாள் என  அடுத்தடுத்து 5 பேர்  மயங்கி விழுந்தனர்‌. தொடர்ந்து அவர்களுக்கு திருக்குவளை அரசு தலைமை மருத்துவமனையில்‌ முதலுதவி  சிகிச்சை அளிக்கப்பட்டது‌.ஏ டி எஸ் பி  சுகுமார் மற்றும் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தடுப்புகள் அமைத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்றும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.தொடர்ந்து  வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ பௌலின் தலைமையில்,

நடந்த பேச்சுவார்த்தையில் தமிழக முதல்வர் நாளை திருவாரூர் வருகை தர உள்ள நிலையில் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், பாதுகாப்பு பணிக்கு செல்ல வேண்டியுள்ளதாக அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கேட்டுக்கொண்டதன் பேரில் போராட்டம் தற்காலிக திரும்ப பெற்றதாக கூறிய போராட்டக்காரர்கள், டெல்லி உச்ச நீதிமன்ற வழக்கை தமிழக அரசு திரும்பப்பெற்று சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி, பணி ஆணை வழங்கி,பணி நிரந்தரம் செய்ய  வேண்டும், எதிர்வரும் 22 ஆம் தேதி நீதிமன்றத்தில்  நடைபெறும் வழக்கை திரும்ப பெற வேண்டும். கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் மானிய கோரிக்கைக்கு முன்னதாக அனைவரும் ஒன்று திரண்டு மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி சமாதி முன்பு  அறம் போராட்டம்  நடத்தப் போவதாகவும், எச்சரிக்கை விடுத்துள்ளனர்.