பயன்படுத்த முடியாத நிலை.. சீர்காழியில் மூடப்படுகிறதா அம்மா உணவகம்..? பொதுமக்கள் கொந்தளிப்பு!

சீர்காழியில்  இயங்கி வரும் அம்மா உணவகம் பயன்படுத்த முடியாத நிலை இருப்பதால் மூடி அதற்கான சாவியை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க போவதாக  ஊழியர்கள் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை  மற்றும் சீர்காழி ஆகிய இரண்டு நகராட்சிகள் உள்ளன. இந்நிலையில் சீர்காழி நகராட்சி மீது தொடர்ந்து நாளுக்கு நாள் பல்வேறு குற்றச்சாட்டுகள் பொதுமக்களிடம் இருந்தும், நகராட்சி சார்ந்த  பணியாளர்களிடம் இருந்தும் எழுந்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் சீர் கெட்டுப் போகும் சீர்காழி நகராட்சியால் சீர்காழி நகராட்சி சேர்ந்த பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். சீர்காழி நகராட்சியில் ஆளும் கட்சியை சேர்ந்த நகர மன்ற தலைவராக திமுகவை சேர்ந்தவர்கள் பதவி வகுத்து வருகின்றனர். 

Continues below advertisement


இந்த சூழலில் சீர்காழி நகராட்சி மேம்படும் என எண்ணிய நிலையில், இங்கு நாளுக்கு நாள் மிகவும் சீர் கெட்டு வருவதாக பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றன. ‌இது குறித்து சீர்காழி நகராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த காரணத்தினால் நகராட்சி நிர்வாகம் ஆணையரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. அரசு அலுவலரான ஆணையர் இப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை முறையாக பூர்த்தி செய்து வந்தார்கள். ஆனால் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகர மன்ற தலைவர் மூலம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஒவ்வொரு பணிகளும் நடைபெறும் சூழல் நிலவுவதால், தற்போது எந்த ஒரு அடிப்படை தேவையும் சீர்காழியில் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை, குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தெரு மின்விளக்கு பிரச்சனை, குடிநீர் பிரச்சினை, சாலை வசதி, எல்லாவற்றுக்கும் மேலாக தூய்மைப் பணியான குப்பைகள் அள்ளும் பணியும் சரிவர நடைபெறாமல் பல இடங்களில் சுகாதார சீர்கேடும் நிலவி வருகிறது.


இதுவரைக்கு நகர மன்ற கூட்டத்தில் ஒரு சில நகர வார்டு உறுப்பினர்கள் குரல் எழுப்பினாலும் அதற்கு நகர மன்ற தலைவர் செவி சாயிப்பதாக தெரியவில்லை, மேலும் ஒவ்வொரு நகர மன்ற கூட்டத்திலும் சீர்காழி நகராட்சி குறித்து பல்வேறு பிரச்சனைகளை உறுப்பினர்கள் வெளிக்கொண்டு வருவதால், பிரச்சினைகள் மக்களுக்கு  தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக நகர மன்ற கூட்டத்திற்கு செய்தியாளர்களுக்கு தகவல் அளிக்காமல் ரகசியமாக கூட்டங்களை ஏற்பாடு செய்வதாகவும், ஒரு சில உறுப்பினர்கள் நகர மன்ற தலைவர் மீதும் ஆணையர் மீதும் புகார்களை தெரிவிக்கின்றன.


இந்நிலையில் சீர்காழி நகராட்சி எல்லையை குறிக்கும்  எல்லை பலகையை கூற முறையாக பராமரிக்காமல், பல ஆயிரம் ரூபாய் செலவில், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஆன சீர்காழி நகராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது என வைக்கப்பட்ட பலகை தற்போது பிடுங்கி எறியப்பட்டு குப்பை தொட்டியில் சாய்த்து வைக்கப்பட்டுள்ளது. இதனை காணும் சீர்காழி நகராட்சிக்குள் புதியதாக வரும் வேலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இப்படியும் ஒரு நகராட்சி நிர்வாகமா? என கேள்வி எழுப்பியவாறு செல்கின்றனர். மேலும் கடந்த வாரம் தெரு விளக்கு எரியவில்லை என பொதுமக்கள் இரவில் தீப்பந்தம் ஏற்றிய சம்பவம், தரைகடை சிறு வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிக்கு லட்சம் வாங்கிய புகார்களும், தொடர்ந்து சரிவர குப்பைகள் அள்ளப்படாமல் உள்ள என பொதுமக்கள் பிரச்சினை நடைபெற்று வரும் நிலையில், தற்போது பல ஏழை எளிய மக்களின் பசியை போக்கி வரும் சீர்காழி நகராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்படும் அம்மா உணவகம் முற்றிலும் பராமரிப்பு இன்றி பொதுமக்களுக்கு சரிவர உணவு வழங்க முடியாத சூழல் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 


 இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக அம்மா உணவக ஊழியர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றன. மேலும் இந்த நிலை தொடரும் பட்சத்தில் அம்மா உணவகத்தை பூட்டிவிட்டு அதன் சாவியினை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.  


இது குறித்து அங்குள்ள ஊழியர்கள் கூறுகையில், சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் நாள்தோறும் 500 முதல் 600 பேர் உணவு உண்ணுகின்றனர்.  இந்நிலையில் இங்கு காலை இட்லியும், மதியம் சாம்பார் மற்றும் தயிர் சாதம் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக காலை உணவான இட்லி தயார் செய்ய மாவு அரைக்கும் கிரைண்டர் பழுதால் இட்லி தயார் செய்ய முடியாமல் காலை உணவுக்காக அம்மா உணவகத்தை தேடிவரும் ஏழை எளிய மக்கள் ஏமாற்றத்துடன் பசியுடன் திரும்பி செல்கின்றனர். இதுபோன்று மதியம் உணவு சமைக்க அடுப்புகள் பழுதால் ஒரேயொரு அடுப்பை மட்டும் வைத்து போதுமான அளவு உணவு தாயார் செய்யமுடியாத நிலையில் மதிய உணவும் பலருக்கு தடை படுகிறது.


அதுமட்டுமின்றி சமையலுக்கு தேவையான முக்கிய காரணியான எரிபொருள் சிலிண்டர் இணைப்பு பகுதியும் பழுதடைந்து அதனையும் பயன்படுத்த முடியாமல் அங்குள்ள பணியாளர்கள்  அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடி தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரங்களும் பழுதுபட்டு பயனற்று காணப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் பல ஏழை எளிய மக்களின் பசியாற்றி வரும் அம்மா உணவகத்தை கட்சி பாகுபாடு இன்றி உணவகம் நல்ல முறையில் இயங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola