தஞ்சாவூர்: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 521,281 நபர்களும், இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 8032 நபர்களும் பயன் பெற்றுள்ளனர் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.


மக்களின் நலன் காக்கும் அரசு


இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: மக்கள் நல்வாழ்வுக்காக அக்கறையுடன் செயல்படுகிற தமிழக அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்கள் நலனில் பெரிதும் கவனம் செலுத்தி காத்து வருகிறது. ஏராளமான நலத் திட்டங்களின் வரிசையில் மக்களைத்தேடி மருத்துவம்", "இன்னுயிர் காப்போம்" போன்ற மகத்தான திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக செயல்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் இந்த திட்டங்கள் பிற மாநில அரசுகளால் பெருமையுடன் பேசப்படுகிறது என்றால் அது மிகையல்ல.


இல்லம் தேடி மருத்துவ சிகிச்சை


இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஏழை, எளியோரின் இல்லம் தேடிச் சென்று இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தினால் 1.70 கோடி நபர்கள் பயனடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 5,21,281 நபர்கள் பயன் பெற்றுள்ளனர்.


உயிர்காக்கும் உன்னதத் திட்டம்


இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 திட்டத்தின் கீழ் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைப்பதோடு அதனால் குடும்பங்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவினங்களை குறைக்கும் உயிர் காக்கும் உன்னதத் திட்டத்தின் கீழ் விபத்து நிகழும் பகுதிகளுக்கு அருகாமையிலுள்ள 683 மருத்துவமனைகளில் ரூ.213.47 கோடி செலவில் 2.45 இலட்சம் நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 8032 நபர்களுக்கு ரூ.6,23,04,160 மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


முதல்வருக்கு நன்றி


மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் பயனடைந்த பருத்திக்குடி ஊராட்சி படைத்தலைவன்குடி கிராமத்தைச் சேர்ந்த நாகையன் என்பவர் தெரிவித்தாவது:  எனக்கு இரத்த அழுத்தம் பக்கவாதம் நோய் உள்ளதால், என்னால் நடக்க முடியாது. 1 1/2 வருடத்துக்கு முன்னாடி ஒரு நாள் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் டாக்டர் நர்சுகள், என் வீட்டில எனக்கு சர்க்கரை நோய், பிரஷர் பரிசோதனை செய்தார்கள்.


எனக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளை என் வீட்டுக்கே வந்து தருகிறார்கள். மேலும் தேவையான பயிற்சியையும் சொல்லி தந்திருக்காங்க. எனது உடல் நலம் தற்போது தேறிவந்துள்ளது. நான் நல்லபடியாக குணமடைவதற்கு உதவி செய்த முதலமைச்சருக்கு நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இன்னுயிர் காப்போம் திட்டத்தில் பயன்பெற்றவர் கருத்து


இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற கோவிந்தன் என்பவர் தெரிவித்ததாவது: நான் எனது பைக்கில் செல்லும் போது கோவிலாச்சேரி அருகே பின்னால் வந்த நான்கு சக்கர வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டது. என்னை 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். எனது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் இன்னுயிர் காப்போம் 48 மருத்துவ காப்பீட்டு முறையில் நன்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. 


தற்போது நலமுடன் உள்ளேன். இன்னுயிர் காப்போம் திட்டத்தை நடைமுறைப்படுத்திய தமிழக முதலமைச்சருக்கு மிக்க நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார். இவ்வாறு மக்களைத்தேடி மருத்துவம் திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம் போன்ற திட்டங்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மாவட்ட நிர்வாகம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.