தஞ்சாவூர் திமுக கோட்டையாக இருந்த தொகுதியை 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கைப்பற்றியது. தொடர்ந்து, தஞ்சாவூர் நகராட்சி (இப்போது மாநகராட்சி), தஞ்சாவூர் மக்களவை தொகுதி எனப் படிப்படியாக திமுக இழந்தது. இவற்றை எல்லாம் அதிமுக கைப்பற்றியது. இழந்த சட்டப்பேரவை, மக்களவைத் தொகுதிகளை ஒரே நேரத்தில் 2019 ஆம் ஆண்டில் திமுக மீண்டும் கைப்பற்றியது. அடுத்து 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் தஞ்சாவூர் தொகுதியில் திமுக வெற்றி பெற்றுத் தக்க வைத்துள்ளது. தஞ்சாவூர் நகராட்சியில் 1996 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து திமுக வெற்றி பெற்று வந்த நிலையில், 2011 ஆம் ஆண்டில் முதல் முதலாக அதிமுக வெற்றி பெற்றது. 156 ஆண்டுகள் பழைமையான இந்த நகராட்சி 2014 ஆம் ஆண்டில் மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இது. இந்த முதல் தேர்தலில் மொத்தமுள்ள 51 வார்டுகளில் திமுக கூட்டணி 40 வார்டுகளை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் தஞ்சாவூர் மாநகராட்சியையும் பிடித்து, திமுக கோட்டையாக மாறியிருக்கிறது.




இதனால் சந்தோஷமடைந்த திமுகவினர், அடுத்ததாக, தஞ்சாவூர் மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு எழும்பியுள்ளது. இதனிடையே, தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பிலிருந்தே மேயர் பதவியைப் பெறுவதற்காகக் தங்களது வேண்டியவர்கள் மூலம் பல்வேறு வகைகளில் காய் நகர்த்தி வந்தனர். மேயராக வேண்டும் என தங்களது ஆதரவாளர்களிடம் கூறி வந்தனர்கள், அதனை உறுதி படுத்தும் வகையில் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.



வெற்றி பெற்றவர்களில் 51 ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அஞ்சுகம் பூபதி. ஏற்கெனவே 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டார். அப்போது, இவருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரால் அத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.  இதையடுத்து, 5 மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற தஞ்சாவூர் தொகுதி தேர்தலில் அஞ்சுகம் பூபதி வெற்றி வாய்ப்பை இழந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெற்றி வாய்ப்பை இழந்த இவருக்கு அப்போதிலிருந்தே அனுதாபம் இருந்து வருகிறது. எனவே, இம்முறை மேயர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடையே நிலவுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு இவரும் மேயர் பதவியைப் பெற காய் நகர்த்தி வருகிறார்.  மறைந்த முதல்வர் கருணாநிதியின் குடும்பத்துக்கு அஞ்சுகம் பூபதியின் தந்தை காலம் சென்ற பூபதி மிகவும் நெருக்கமானவர். மேலும், மகப்பேறு மருத்துவரான அஞ்சுகம் பூபதி சில ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு மருத்துவம் பார்த்து குணப்படுத்தினார். அக்குடும்பத்தின் ஆதரவால் 2016 ஆம் ஆண்டில் இவருக்கு தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கிடைத்தது. இந்த ஆதரவு தொடர்வதால், மேயர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அஞ்சுகம் பூபதி உள்ளார்.




இதே போல் திமுக இளைஞரணியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அமைப்பாளர் சண். ராமநாதனும்  தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார். நகர்மன்ற, மாமன்றத் தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் இவர் சட்டப்பேரவைத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட இரு முறை முயன்றார். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால், இப்போது மேயர் பதவியைப் பெறும் முயற்சியில் முழு வீச்சில் இறங்கியுள்ளார். கருணாநிதியின் சமூகத்தைச் சார்ந்த இவருக்கு திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலினுடன் மிகவும் நெருக்கமானவராக இருக்கிறார். இதனால், இந்த முறை இவருக்கு மேயர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.




மாநகரிலுள்ள திமுக மூத்த பிரமுகர்களில் ஒருவரான ச. சந்திரசேகர மேத்தா நகர்மன்ற, மாமன்றத் தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். மாநகரில் உணவகம் நடத்தி வரும் இவரும் இம்முறையும் வெற்றி பெற்றுள்ளார். மாநகராட்சியின் 17 ஆவது வார்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர் மேயர் பதவியைப் பெறுவதற்காக திமுக நிர்வாகிகள் சிலரை அணுகி தீவிரமாக முயன்று வருகிறார். உள்ளூரில் உள்ள திமுக மூத்த நிர்வாகிகளில் சிலரும் இவரை மேயர் பதவிக்காக மேலிடத்துக்குப் பரிந்துரைத்து வருகின்றனர்.




இவர்களைப் போல, 34 ஆவது வார்டில் வெற்றி பெற்ற க. இளங்கோவன், 40 ஆவது வார்டில் வெற்றி பெற்ற திமுக மாநகரத் துணைச் செயலர் க. நீலகண்டன் உள்ளிட்டோரும்  மேயர் அல்லது துணை மேயர் பதவியைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  இதில் கரந்தை 5 வது வார்டை சேர்ந்த திமுக உறுப்பினர் ரேவதிகார்த்திகேயன் மூன்று முறை வெற்றி பெற்று, திமுக கோட்டையாகவும், உறுதி செய்யப்பட்ட வார்டாக வைத்துள்ளார்.  இதனால் கட்சி தலைமையே துணை மேயர் வழங்கினால் ஏற்றுக்கொள்வோம் எனவும், நம்பிக்கையுடன் இருந்து வருகின்றார். ஆனால், உள்கட்சி பூசலால் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளாததால், இவர்கள் அனைவரும் முயற்சி செய்தாலும் கூட, தஞ்சாவூர் மேயர், துணை மேயர் யார் என்பதைக் கட்சி மேலிடம்தான் முடிவு செய்து அறிவிக்கும் என திமுக மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.