தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சின்னையா தெரு மைனர் பங்களா எதிரில், தனியார்  மருத்துவமனை மற்றும் அதனுடன் இணைந்த மருந்தகம் உள்ளது.  அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் மருந்துச் சீட்டு இல்லாமல், மருத்துவரின் பரிந்துதை இல்லாமல் வழங்ககூடாத போதை மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல்

  குறிப்பிட்ட மாத்திரைகளை தரமுடியாது என்று கடையில் இருந்த பெண் கூறியுள்ளார். பல முறை அப்பெண்ணிடம் போதை மாத்திரைகளை கேட்டுள்ளார். ஆனால் அப்பெண் மாத்திரைகளை வழங்காமல், மருத்துவ பரிந்துரை சீட்டு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஒரு வாலிபர் தன் சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த மூன்றடி நீள அரிவாளை காட்டி மிரட்டினார்.




இதனால் உயிருக்கு பயந்த போன அப்பெண், கடைக்குள் ஒடினார். இதனை பயன்படுத்தி கொண்டு போதை இளைஞர்கள், போதை  மாத்திரைகள் மற்றும் அங்கிருந்த துாக்க மாத்திரைகளை அள்ளிச் சென்றனர். இதில் போதை மாத்திரைகள் கிடைக்காத பட்சத்தில்,  தூக்க மாத்திரையை சில இளைஞர்கள் போதை மாத்திரையாக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து  மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பாலகிருஷ்ணன், பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். புகாரையடுத்து காவல் துணை கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன் மற்றும் காவல்துறையினர் மருந்தகத்திற்கு வந்து, அங்கிருந்த சிசிடிவி பதிவு  காட்சிகளை ஆய்வு செய்தனர். குற்றவாளிகளான போதை இளைஞர்களை உடனடியாக தேடிப்பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா காந்த புனேனி உத்தரவிட்டார்.




சிசிடிவி காட்சியில் தெரிந்த உருவத்தை அடையாளம் வைத்து, காவல்துறையினர் தேடி வந்த நிலையில், குற்றவாளிகள்  பட்டுக்கோட்டை, மகாராஜா சமுத்திரம் காட்டாற்று பகுதியில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலையடுத்து, பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் ராஜேஷ், உதவி ஆய்வாளர்கள் முத்துக்குமார், பாஸ்கர் உள்ளிட்ட காவல்துறையினர் அங்கு சென்றபோது, காவல் துறையினரை கண்டதும்  பாலத்தில் இருந்து குதித்து தப்பிச் செல்ல முயன்ற பண்ணவயல் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஹரன் (20) வலது கை முறிந்தது. பட்டுக்கோட்டை தச்சுத் தெருவைச் சேர்ந்த  ராஜேஷ் (19) வலது கால் உடைந்தது.


இதையடுத்து இருவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்த அரிவாளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  இதையடுத்து  பட்டுக்கோட்டை வந்த, தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனி, குற்றவாளிகளை துரிதமாக பிடித்த காவல்துறையினரை நேரில் பாராட்டினார். இதேபோல் பட்டுக்கோட்டை கிளை, இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள் டாக்டர்கள் அன்பழகன், நியூட்டன், ராஜா ராமலிங்கம் ஆகியோர் உடனடியாக குற்றவாளிகளை பிடித்த காவல்துறையினருக்கு பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர். தூக்க மாத்திரையை போதைக்கு பயன்படுத்திவரும் இளைஞர்களின் செயல் சமூக ஆர்வலர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.