தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் சசிகலா ஆதரவாளர் வீட்டு திருமண விழா நடந்தது.  இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சசிகலா சென்னையில் இருந்து வந்திருந்தார். அவர் மணமக்களை வாழ்த்தினார்.


மேலும், இந்த திருமண நிகழ்வில் சசிகலா பேசியதாவது:


”கழகம் ஒன்றுபட வேண்டும். வென்று காட்ட வேண்டும். அ.தி.மு.க., உண்மையான தொண்டர்களின் தியாகத்தால் உருவான இயக்கம். எதிர்கட்சியினர் எத்தனை கணக்குகள் போட்டாலும், நான் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாராலும் அழித்து விடமுடியாது. எத்தனையோ சோதனையான காலகட்டங்களை எல்லாம் இந்த இயக்கம் கடந்து வந்துள்ளது.

எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பிறகு ஏற்பட்டது போன்ற சோதனையான காலம்தான் ஜெயலிலதா மறைவுக்கு பிறகு மீண்டும் ஏற்பட்டுள்ளது. அப்போது எப்படி கழகம் மீண்டெழுந்தோ, அதை போல தற்போதும் புதுப்பொலிவு பெறும். இதற்கு நானே காரணமாவேன்.

கட்சியை மீட்கும் வரை நான் ஓயமாட்டேன். தமிழக மக்கள் நம் புரட்சி தலைவர் மற்றும் புரட்சி தலைவி பொற்கால ஆட்சி மீண்டும் வராதா? என ஏக்கப்பட்டு, எதிர்பார்க்கும் சூழலில், விரைவில் நிறைவேற்றி காட்டுவேன். நம் கழகத்தை காப்பாற்றிடவும், மீண்டும் வலிமை கொண்ட இயக்கமாக உருவாக்கிடவும் தகுந்த நேரம் வந்துவிட்டது.

எல்லோரையும் ஒருங்கிணைத்து ஒரே இயக்கமாக உருவாக்க பயணித்து வரும் சூழலில், தொண்டர்கள் அனைவரும் பொறுமை காக்கவேண்டும். பிரச்சனைகளை பொறுமையோடு எதிர்கொண்டால் வெற்றியை காணமுடியும். குரங்கு ஒன்று மாங்கொட்டையை ஊன்றி, மரமாக வளரச் செய்தால், நம் இஷ்டத்திற்கு மாம்பழங்களை சாப்பிடலாம் என, மாங்கொட்டையை மண்ணுக்குள் புதைத்து நீரூற்றியது. சிறிது காலம் ஆகியும் செடி எதுவும் வளரவில்லை. குரங்குக்கோ மாம்பழங்களை தின்பதற்கு அவசரம். என்ன செய்தது... மண்ணில் புதைத்து வைத்து இருந்த மாங்கொட்டை எடுத்து பார்ப்பது, மீண்டும் மண்ணில் புதைப்பதுமாக இருந்தது.

மாங்கொட்டை பத்திரமாக இருப்பதை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டது. ஆனால், மாங்கொட்டையை எடுத்து, எடுத்து பார்த்தால் செடியாக முளைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த குரங்கு மாங்கொட்டையை துார வீசி எறிந்தது. குரங்கின் ஆசை நியாயமானது என்றாலும், அதன் அவசர புத்தி நியாயமானதல்ல. எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்க வேண்டும் என்றால், விதையை விதைத்து நீருற்றி சில காலம் பொறுமை காக்க வேண்டும். சோதனைகளில் நமக்கு கிடைத்த அனுபவத்தை நாம் நிச்சயம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி செயல்பட்டால் நம் இயக்கம் வலிமை பெறும்” இவ்வாறு அவர் பேசினார்.

சசிகலாவின் பேச்சுக்கு திருமண மண்டபத்தில் பெரும் கரகோஷம் எழுந்தது. அவர் யாரைப் பற்றி பேசுகிறார் எனவும் தங்களுக்குள் தொண்டர்கள் விவாதித்துக்கொண்டனர்.