தஞ்சாவூரில் 972.7 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள உள்ள தமிழ் பல்கலைக்கழகம் கடந்த 1981ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதியில் உருவாக்கப்பட்டது. தமிழ் மொழி, பண்பாடு போன்ற துறைகளில் உயர் ஆய்வை நோக்கமாக கொண்டு செயல்படும் இப்பல்கலைக்கழகத்தில், பழங்கலை வடிவங்களை அவற்றின் மரபு, சுய அமைப்பு, தூய்மை கெடாது பாதுகாத்தல், புது உத்திகள் கண்டு அவற்றின் வளர்ச்சிக்கு உதவுதல் முதலிய விரிவானஅடிப்படை நோக்கம் கொண்டது கலைப்புலம். இப்புலத்தின்கீழ் நான்கு துறைகள் தொடங்கப்பட்டு தற்போது சிற்பம், இசை, நாடகம் ஆகிய மூன்று துறைகள் செயல்பட்டுவருகின்றன. தமிழ் பணிக்கு அடிப்படையாக அமையும் ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துச்சுவடிகள், கல்வெட்டுச் சான்றுகள் முதலியவற்றை தேடி கண்டுபிடித்துத் தொகுத்து பாதுகாத்தல் மற்றும் ஆய்வு செய்தல் ஆகிய நோக்கம் கொண்டது சுவடிப்புலம். இப்புலத்தின்கீழ், ஓலைச்சுவடித்துறை, அரிய கையெழுத்து சுவடி துறை, கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை, கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை ஆகிய

  நான்கு துறைகள் செயல்பட்டு வருகின்றன.




பல இடங்களில் வாழ்ந்து வரும் தமிழர்களின் தேவையை நிறைவேற்றும் வகையில் விரிவான அடிப்படையில் பலதுறை சார்புடையதாக ஆய்வு அமைய வழி செய்தலை நோக்கமாக கொண்டது வளர்தமிழ்ப்புலமாகும். இலக்கிய இலக்கண ஆராய்ச்சிகளை வளர்ப்பது, தமிழ் இலக்கிய படைப்புகளை உரிய முறையில் உலகிற்கு அறிமுகப்படுத்துவது ஆகிய அடிப்படை நோக்கங்களை கொண்டது மொழிப் புலமாகம்.  இப்புலத்தின் கீழ், இலக்கிய துறை, மொழியியல் துறை, மெய்யியல் துறை, பழங்குடி மக்கள் ஆய்வு மையம் நாட்டுப்புறவியல் துறை, இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி உள்ளிட்ட  ஆறு துறைகள் செயல்பட்டுவருகின்றன. பழந்தமிழரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மரபு செல்வங்களைத் தேடி கண்டு தொகுத்தல், ஆய்வு செய்தல் மற்றும் இக்கால நவீன தொழில்நுட்ப நுணுக்கங்களை துணை கொண்டு பயன் காணல் முதலான நோக்கங்களை கொண்டது இப்புலம். அறிவியற்புலமாகும். இதன்கீழ் சித்த மருத்துவத்துறை, தொல்லறிவியல் துறை, தொழில் மற்றும் நில அறிவியல் துறை, கட்டடக்கலைத்துறை, கணிப்பொறி அறிவியல் துறை, சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை என இப்போது ஆறு துறைகள் செயல்படுகின்றன.




தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில்,  நிறுவன நாள் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, 50 சதவீத தள்ளுபடியில் சிறப்பு புத்தக விற்பனை தொடக்க விழா  நடைபெற்றது. தமிழ் பல்கலை கழகத்தின் நிறுவன நாள் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி சிறப்பு புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.




அதன்படி  பல்கலைக் கழக வளாகத்தில் சிறப்பு விற்பனை தொடங்கியது. புத்தக விற்பனை  அரங்கை குத்துவிளக்கேற்றி பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். ஒரு மாத காலத்துக்கு நடைபெறும் இந்த புத்தக விற்பனை கண்காட்சியில் 278 தலைப்புகளில் நூல்களும், 16 புதிய வெளியீடு நூல்களும்  இடம் பெற்றுள்ளது. பின்னர் பல்கலைக்கழக பேரவை கூடத்தில் நிறுவன நாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு வந்தவர்களை மொழிப்புலத் தலைவர் முனைவர் இரா.காமராசு வரவேற்றார். வளர் தமிழ் புலத் தலைவர் கு.சின்னப்பன், பதிவாளர் முனைவரே கோ.கோவைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்ப் பல்கலைக் கழகம் சார்பில், தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் எழுதிய 16 புதிய நூல்களை பல்கலைக் கழக துணை வேந்தர் கோ.பாலசுப்பிரமணியன் வெளியிட அதனை புதுச்சேரி பிரெஞ்ச் ஆசியவியல் நிறுவனத்தின் முதுநிலை ஆய்வாளர் பேராசிரியர் கி.நாச்சிமுத்து பெற்றுக் கொண்டார்.