மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மிகவும் பழமையான சட்டை நாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.  திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் உமையம்மை வழங்கிய ஞான பாலை அருந்தி தேவாரத்தில் முதல் பதிகத்தை பாடிய தலமான கோயிலுக்கு 32 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு வருகின்ற மே மாதம் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலின் மேல கோபுர வாசல் அருகே கடந்த 16 -ம் தேதி மதியம் யாகசாலை அமைப்பதற்காக குபேர மூலையில் ஜேசிபி எந்திரம் மூலம் மண் எடுப்பதற்காக பள்ளம்  தோண்டப்பட்டது.




அப்போது பூமிக்கு அடியில் 2 அடி ஆழத்தில் அரை அடி முதல் 2 அடி உயரமுள்ள 23 ஐம்பொன் சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து உடுக்கை, மணி, கலசம், சலங்கை, தீபத்தட்டு உள்ளிட்ட பூஜை பொருட்களும், திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பதிகங்கள் பதிக்கப்பட்ட 413 முழுமையான செப்பேடுகளும், 83 பிண்ணப்பட்ட செப்பேடுகளும் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து தருமபுர ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் சிலைகள் மற்றும் செப்பேடுகளை பார்வையிட்டு சிறப்பு பூஜைகளை நடத்தினார். இதனையடுத்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம்  மற்றும் அதிகாரிகள் கோயிலுக்கு வந்து சிலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.




 


மேலும், இதனை கருவூலத்திற்கு எடுத்துச்செல்ல தருமபுரம் ஆதீனம் மறுப்பு தெரிவித்த நிலையில், சிலைகள் செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தும் வருவாய் துறைகளின் கண்காணிப்பில் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள், செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தும் 13-ம் நூற்றாண்டுக்கு முந்தையதாக இருக்கலாம் எனவும், இவை அனைத்தும் மதிப்பிட முடியாதவை எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஐம்பொன் சிலைகள், பூஜை பொருள்கள், செப்பேடுகள் உள்ளிட்டவைகளை மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் நேரில் வந்து பார்வையிட்டனர்.




பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சீர்காழி ஆன்மீக பூமியாகும். இந்த பூமியில் திருஞானசம்பந்தர் மூன்று வயதில்  பார்வதி தேவிவழங்கிய ஞானபாலை உண்டு முதல் தேவாரப்பதிகத்தை பாடிய  வரலாறு உண்டு. இந்நிலையில் இந்த கோயிலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகளை இந்த கோயிலிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். மாறாக அரசு கோயிலிலிருந்து சிலைகளை அப்புறப்படுத்த நினைத்தால் பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம்  நடத்தப்படும். இச்சிலைகள் மற்றும் செப்பேடுகளை விரைவில் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் வந்து பார்வையிட உள்ளார்.


Solar Eclipse 2023: 150 ஆண்டுகளுக்கு பின் தோன்றும் முழு சூரிய கிரகணம்.. நாளை எங்கு, எப்படி பார்க்கலாம்..?




கடந்த காலங்களில் அக்பர், கஜினி உள்ளிட்டோர் படை எடுப்புகளால் இந்த ஐம்பொன் சிலைகளை கோயில் வளாகத்திற்குள் பாதுகாப்பு கருதி புதைத்து வைத்திருக்கலாம். தருமபுரம் ஆதீனம் பழமையான ஆதீனம் எனவே அரசு கோயில் வளாகத்திற்குள்ளேயே சிலைகளை பாதுகாப்பாக வைத்து ஆய்வு பணியை மேற்கொள்ளலாம் இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்" என எச்சரித்தார்.