தஞ்சாவூர்: ஆதிதிராவிடர் நலத்துறையில் பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக தொகுப்பூதியத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர் என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை உயர்நிலை, நடுநிலைப் பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர்களின் காலிப்பணியிடம் நிரப்பப்படவுள்ளது.
விண்ணப்பதாரர்களிடமிருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித் தகுதி சான்று நகல்களுடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம். தஞ்சாவூர் 613 010 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். மேற்கண்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்தில் முதுகலை பட்டப்படிப்பு (M.A., & M.Sc.) ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் B.Ed. முடித்திருத்தல் வேண்டும்.
பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்தில் இளங்கலை பட்டப்படிப்பு (B.A& B.Sc.) ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் B.Ed. முடித்திருத்தல் வேண்டும். தற்காலிக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.18,000, முதுகலை பட்டதாரி கணினி பயிற்றுநர் ஆசிரியர்களுக்கு ரூ.15,000 மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15,000 ஊதியமாக நியமிக்கப்பட்டுள்ளது. தற்காலிக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் வரும் 26.06.2025 மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட தற்காலிக ஆசிரியர்கள் பதவிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த பணிநாடுநர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நிலையில் இருப்பின் ஆசிரியர் தகுதித் தேர்வு (TRB) தேர்ச்சி பெற்றவர்களுக்கும், அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் காலிப்பணியிடங்களாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்பிடும் வரை தகுதி பெற்ற பணிநாடுநர்களைக் கொண்டு சம்பந்தப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு காலிப்பணியிடம் நிரப்பப்படும் நாள் முதல் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் பணியமர்த்தப்பட்ட தற்காலிக தொகுப்பூதிய பணியாளர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.
தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பணியில் நியமனம் செய்யப்படும் நாள் முதல் மார்ச்-2026 வரை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பணியில் நியமனம் செய்யப்படும் நாள் முதல் ஏப்ரல்-2026 முடிய உள்ள மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக பள்ளி மேலாண்மைக் குழு மூலம் பணியமர்த்தப்படும்.
மேலும், கூடுதல் விவரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் முதல்தளத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தினை தொடர்பு கொள்ளவும் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.