தஞ்சாவூர்: குறுவை பயிர்களை காப்பாற்ற கர்நாடகத்திடம் இருந்து உரிய காலத்தில் தண்ணீர் பெற்று தர தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் தஞ்சாவூரில்ஆர்ப்பாட்டம் நடந்தது. 


தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு மத்திய, கிழக்கு, மேற்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாவட்ட மாநகர செயலாளர் சரவணன் வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் மா.சேகர் (மத்திய), ரெத்தினசாமி (மேற்கு), சி.வி.சேகர் (தெற்கு), பாரதிமோகன் (கிழக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


அமைப்பு செயலாளர்களும் முன்னாள் அமைச்சர்களுமான காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமை வகித்து விவசாயிகளை வஞ்சிக்கும் தி.மு.க. அரசை கண்டித்தும், உரிய காவிரி நீரை பெற்று கொடுக்க வலியுறுத்தியும் பேசினர்.


இதில் டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்களை காப்பாற்ற கர்நாடகத்திடம் இருந்து உரிய காலத்தில் தண்ணீர் பெற்று தர தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு அறிவிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் ஆணைப்படி தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 


அமைப்பு செயலாளர்கள் காந்தி, துரை.செந்தில், கொள்கை பரப்பு துணை செயலாளர் துரை.திருஞானம், விவசாய அணி இணைச் செயலாளர் ராஜமாணிக்கம், துணை செயலாளர் சிங்.ஜெகதீசன், மருத்துவர் அணி துணைச் செயலாளர் கருணாநிதி, முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் கோவி.தனபால், முன்னாள் கவுன்சிலர் பூபதி, அம்மா பேரவை துணை தலைவர் பாலை.ரவி, விளார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தம்பி என்ற சோமரத்தின சுந்தரம், நீலகிரி ஊராட்சி பிரதிநிதி சண்முகசுந்தரம், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் திருநீலகண்டன், மாணவர் அணி முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் நாகத்தி கலியமூர்த்தி, சாமிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கிழக்கு மாவட்ட மாநகர செயலாளர் ராம.ராமநாதன் நன்றி கூறினார்.




ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகி விட்டன. 5 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை பயிர்களில் 3.5 லட்சம் ஏக்கரில் தண்ணீர் இன்றி கருகி விட்டன. அடுத்து சம்பா சாகுபடி தொடங்குவதே கேள்விக்குறியாக உள்ளது.
 
காவிரி நீர் பிரச்சனை வரும் நேரத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி அதில் எடுக்கப்படும் முடிவுகள் செயல்படுத்தப்படும். ஆனால் தி.மு.க. அரசோ அது போல் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தவில்லை. கர்நாடகாவில் இருந்து உரிய நீரை பெற்று கொடுக்க தி.மு.க அரசுக்கு திராணி இல்லை.


டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது எடப்பாடி பழனிச்சாமி. அதோடு இல்லாமல் விவசாயிகளின் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்தார். மேலும் வெள்ளம், புயல், வறட்சி காலத்தில் ரூ.2268 கோடி நிவாரணம் வழங்கினார். பயிர் காப்பீடு இழப்பீடு தொகையாக ரூ.9600 கோடி வழங்கினார். இது இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத திட்டமாகும். ஆனால் மு.க.ஸ்டாலினோ எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.