தஞ்சாவூர்: இந்த தீபாவளி விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளியாக மாறிவிட்டது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்து வரும் தொடர் கனமழையால் 1,700 ஏக்கரில் குறுவை, சம்பா நெற்பயிர்கள் சாய்ந்தும், தண்ணீரில் மூழ்கியும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் சாலையில் கொட்டி வைத்து காத்து கிடக்கின்றனர். 

லாரிகள் பிரச்சனை, கொள்முதல் பணி தாமதம் காரணமாக, தற்போது பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள் அறுவடை செய்து குவித்து வைத்துள்ள நெல் குவியல்கள் மழையில் நனைந்து வருகின்றன. இதனால், நெல்மணிகள் நனைந்து மீண்டும் முளைத்து வருவதால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர். உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என்று கடந்த வாரத்தில் விவசாயிகள் சாலைமறியலும் செய்தனர். இந்நிலையில் நேற்று தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து முளைத்து வீணாகி வரும் நெல் குவியல்களை பார்வையிட அ.தி.மு.க பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூருக்கு வருகை புரிந்தார். 

Continues below advertisement

பின்னர் அவர் தஞ்சை அருகே காட்டூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு வந்தார். அங்கு கூடியிருந்த ஏராளமான விவசாயிகளிடமும் கொள்முதல் தாமதம் காரணமாக குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் நனைந்து முளைத்து வரும் நிலை குறித்தும், தொடர் மழையால் மூழ்கி பாதிப்படைந்த நெற்பயிர்கள் விவரங்கள் குறித்தும் கேட்டு அறிந்தார். இதற்கு விவசாயிகள், தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை கொண்டு வந்தால் உடனுக்குடன் கொள்முதல் செய்யாமல் தாமதப்படுத்துகின்றனர். இதனால் பல நாட்களாக கொள்முதல் நிலையங்களில் நெல்களை கொட்டி வைத்து காத்து கிடக்கிறோம். இதனால் நெல்கள் நனைந்து முளைத்து வருகிறது. மேலும் லாரிகள் பிரச்சனையால் நெல்கள் உடனுக்குடன் இயக்கமும் செய்யப்படுவதில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து வருகிறோம். தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான மற்றும் சம்பா இளம் நெற்பயிர்கள் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. உடனுக்குடன் நெல்களை கொள்முதல் செய்து இயக்கம் செய்ய வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

இதைகேட்டு எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க அரசுக்கு வலியுறுத்துவேன். உடனுக்குடன் கொள்முதல் செய்து இயக்கம் செய்ய வேண்டும் என்று அரசிடம் எடுத்துக் கூறுவேன். நானும் ஒரு விவசாயி தான். அதனால் உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் எனக்கும் தெரியும். விவசாயிகளின் கண்ணீர் துடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்றார்.

பின்னர் மழையில் நனைந்து முளைத்துள்ள நெல்மணிகளை எடுத்து பார்வையிட்டார். தொடர்ந்து இயக்கம் செய்யப்படாமல் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளையும் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சை காட்டூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தேன். விவசாயிகள் என்னிடம் பல்வேறு கோரிக்கைகளை கண்ணீருடன் தெரிவித்தனர்.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தினமும் 2000 மூட்டைகள் கொள்முதல் செய்வதாக சட்டசபையில் அமைச்சர் தெரிவித்து இருந்தார். ஆனால் இங்கு விசாரித்த போது, வெறும் 800 மூட்டைகள் தான் கொள்முதல் செய்வதாக  தெரிவிக்கின்றனர். தமிழக அரசு தவறான தகவலை கூறி விவசாயிகளை ஏமாற்றுகிறது. எனவே விவசாயிகளுக்கு இந்த தீபாவளி கண்ணீர் தீபாவளியாக தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், தஞ்சை மத்திய மாவட்ட அ.தி.மு.க செயலாளர் சேகர் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.