கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயிலுக்கு சொந்தமான 3.47 ஏக்கர் நிலம் மீட்பு

ஒப்பிலியப்பன் கோயிலின் 3 ஏக்கர் 47 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது.நிலத்தின் குத்தகை செலுத்தாத குத்தகைதாரரிடமிருந்து மீட்கப்பட்டு, கோயில் செயல் அலுவலர் இ. ஜீவானந்தத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

Continues below advertisement

தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரத்திலுள்ள உப்பிலியப்பன் கோயில்,  வைணவக் கோவில் ஆகும்.  இது 108 திவ்ய தேச வைணவக் கோவில்களில் ஒன்றாகும். சோழ நாட்டு பதிமூன்றாவது திருத்தலம். இக்கோயில் தென்திருப்பதி என்று சிறப்பு பெற்ற கோயிலாகும். திருவிண்ணகர் என்பது பழம்பெயர், திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் தன் ஒப்பார் இல்லப்பன். ஒப்பிலியப்பன் என்ற பெயர் பெருமாளுக்கு அமைந்தது. காலப்போக்கில் ஒப்பிலியப்பன் என்பது உப்பிலியப்பன் என மருவியது. இதனால், உப்பிலியப்பன் கோயில் என்ற பெயரும் விண்ணகருக்கு அமைந்தது.பூமாதேவியை திருமால் திருமணம் செய்து கொண்டு உப்பில்லாமல் அவள் சமைத்த உணவை உண்டதால் உப்பிலியப்பன் என்றாகி விட்டது என்றும் சொல்வதுண்டு. உப்பிலியப்பனுக்கு உப்பில்லாத நிவேதனமே உகந்தது என்பதால் இன்றும் உப்பில்லாத திருவமுதை பெருமாளுக்கு நிவேதனம் செய்கின்றனர்.

Continues below advertisement

மார்க்கண்டேய மகரிஷி, காவிரி, கருடன், தருமதேவதை ஆகியோருக்கு தரிசனம் தந்தவர். இத்தலம் செண்பகவனம், ஆகாசநகரம், திருவிண்ணகர், மார்க்கண்டேய க்ஷேத்திரம், ஒப்பிலியப்பன் கோவில், தென் திருப்பதி என்ற பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு. நம்மாழ்வாருக்கு ஐந்து வடிவங்களில் காட்சி அளித்துள்ளார். அவை பொன்னப்பன், ம்ணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன் ஆகும்.


முற்காலத்தில் மிருகண்டு மகரிஷியின் புத்திரன் மார்கண்டேய மகரிஷி பூமாதேவி தனக்கு மகளாகவும் திருமால் மாப்பிள்ளை ஆக வேண்டும் என கடும் தவம் செய்தபோது துளசி வனத்தில் அழகிய பெண் குழந்தையைக் கண்டு வியந்து எடுத்து பூமாதேவி என பெயர்சூட்டி வளர்த்தார். திருமண வயதை அடைந்தாள். அவதார நோக்கம் நிறைவேறும் காலம் வந்தது. திருமால் வயது முதிர்ந்த அந்தணர் வேடம் பூண்டு மார்கண்டேயர் குடிலுக்கு வந்து பூமாதேவியைத் தனக்கு மணம் முடிக்கும்படி கேட்க ஏதேதோ கூறியும் கேட்கவில்லை. மகளுக்கு உப்பு போட்டு சமைக்க தெரியாது என கூறினார். விடவில்லை திருமால். செய்வதறியாது கண்மூடி பெருமானை வேண்டி கண் திறந்தபோது உப்பிலியப்பனே முன் தோன்றி உன்னிடம் வளர்ந்தது பூமாதேவியே என உரைத்து மணம் முடித்தார். மார்க்கண்டேயர் விருப்பம் நிறைவேறியது. 


இன்றும் உப்பில்லாமல் உணவு நைவேத்தியம் செய்து வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வருட ஐப்பசி சிரவண நட்சத்திரத்தன்று திருக்கல்யாணம் சிறப்பாக நடக்கும். இத்திருகல்யாணத்தில் கலந்து கொண்டால் திருமணத் தடை நீங்கி குழந்தை பேறு கிட்டும் என நம்பப்படுகிறது, திருப்பதி பெருமாளுக்கு அண்ணனாக உப்பிலியப்பன் கருதப்படுகிறார். இங்கு சென்றாலே திருப்பதி சென்ற பலன் கிட்டும். ஒப்பிலியப்பன் கோயில் அருள்மிகு வேங்கடாஜலபதி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான சன்னாபுரம் வருவாய் கிராமத்தில் 3 ஏக்கர் 47 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது.

தஞ்சாவூர் வருவாய் நீதிமன்ற ஆணைப்படி, இந்த நிலம் திருவிடைமருதூர் காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி, திருநீலக்குடி காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன், வருவாய் நீதிமன்றத் தனி வருவாய் ஆய்வாளர் எல். ரமேஷ், வருவாய் ஆய்வாளர் பிரபு, நில அளவையர் சசிகலா, சன்னாபுரம் கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜன், நாச்சியார்கோவில் சரக ஆய்வாளர் கு.ப. ரவி, திருக்கோயில் கண்காணிப்பாளர் செü. சக்திவேல் ஆகியோர் முன்னிலையில் தொடர்புடைய நிலத்தின் குத்தகை செலுத்தாத குத்தகைதாரரிடமிருந்து மீட்கப்பட்டு, கோயில் செயல் அலுவலர் இ. ஜீவானந்தத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

Continues below advertisement
Sponsored Links by Taboola