தஞ்சாவூர்: உறவினர் வீட்டு துக்கத்திற்கு ஒரே பைக்கில் சென்ற 3 பேர் லாரி மோதி விபத்துக்கு உள்ளாகினர். சாலையில் விழுந்த அவர்கள் மீது லோடு வேன் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


தஞ்சாவூர் அருகே கன்னிதோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் முனியாண்டி (60), மதியழகன் (55), சுப்பிரமணி (54).  கூலித் தொழிலாளிகள். இவர்கள் 3 பேரும் வடுவூர் அருகே உள்ள புள்ளவராயன் குடிகாட்டில் உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு சென்றனர்.


இன்று காலை மூன்று பேரும் வீட்டில் இருந்து ஒரே பைக்கில் புறப்பட்டனர். அப்போது புலவர் நத்தம் பகுதியில் சென்றபோது அங்கு உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்ப முடிவு செய்தனர். இதற்காக பைக்கை பங்க் வளைவில்  திருப்பினர். அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் முனியாண்டி உள்பட 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். அந்த நேரத்தில் பின்னால் வந்த மினி லாரி சாலையில் கிடந்த மூன்று பேர் மீதும் மோதியது. இந்த கோர விபத்தில் முனியாண்டி, மதியழகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.


சுப்பிரமணி பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுப்பிரமணியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.


விபத்தில் பலியான முனியாண்டி ,மதியழகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.