தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் சம்பா பருவத்தில் இதுவரை 2 லட்சத்து 34 ஆயிரத்து 210 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். ஒரு சில பகுதிகளில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நெல் அறுவடை முடிந்த பின்னர் உளுந்து, பயறு போன்றவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்வது வழக்கம். பம்ப் செட் வசதியுள்ள சில பகுதிகளில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடியும் மேற்கொள்வர். குறுவை, சம்பா, தாளடி என்று முப்போகமும், கோடை நெல்லும்தான் தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொள்கின்றனர். நெல் அதிகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி அறுவடைப்பணிகள் நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் கடந்தாண்டு ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே மே மாதம் 24ம் தேதி திறக்கப்பட்டதால் குறுவை பருவத்தில் 72 ஆயிரத்து 816 எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை பணிகள் முழுமையாக நிறைவடைந்தன. குறுவை பருவத்தில் சராசரியாக எக்டேருக்கு 6 ஆயிரத்து 51 கிலோ மகசூல் கிடைக்கப் பெற்றுள்ளது.
நடப்பு சம்பா பருவத்தில் 2.34 லட்சம் டன் நெல் கொள்முதல் - தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல்
என்.நாகராஜன் | 27 Feb 2023 03:21 PM (IST)
குறுவை, சம்பா, தாளடி என்று முப்போகமும், கோடை நெல்லும்தான் தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
Published at: 27 Feb 2023 03:14 PM (IST)