சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி பகுதியை சேர்ந்த பூபாலன். அதே பகுதியில் பாஸ்ட் புட் கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது உறவினரான மேகலா என்ற பெண்ணை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் பூபாலன் நேற்று முன்தினம் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து உறவினர்கள் பூபாலனை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது‌.



இதனிடையே பூபாலனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மேகலாவிடம் உனது கணவர் பிழைக்க மாட்டார் என கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த மேகலா சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை பழைய கட்டிட பகுதியில் இருந்த புறநோயாளிகள் பிரிவு உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேகலாவின் சகோதரர் அவரை மருத்துவமனை வளாகத்தில் தேடி உள்ளார்.


அப்போது மேகலா தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரை காப்பாற்ற முயன்றபோது மருத்துவமனை நிர்வாகமும் உதவாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து உறவினர்கள் அவசர சிகிச்சை பிரிவு பகுதி கொண்டு செல்லும் வழியிலேயே மேகலா உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மேகலாவின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு முற்றுகையிட்டு காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இந்த நிலையில் இறந்த பெண்ணின் உறவினர்கள் திடீரென சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை மற்றும் சேலம் டவுன் காவல் உதவி ஆணையாளர் ஹரி சங்கரி, காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு உடன்படாத உறவினர்கள் காவல்துறையிடம் வாக்குவாதத்தை ஈடுபட்டனர். 



இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, கணவன் பிழைக்க மாட்டார் என பெண்னிடம் கூறியதால் மனம் உடைந்த மேகலா தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான மருத்துவர் மீது நடவடிக்கை எடுத்து அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும். இறந்த பெண்ணுக்கு நீதி வேண்டும் என தெரிவித்தனர். இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்தனர.


இது குறித்து டவுன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூபாலன் சிகிச்சை பலனின்றி இன்று காலை இழந்தார். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை வளாகத்தில் கணவர் உயிரை காப்பாற்ற முடியாமல் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)