திருச்சி கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் 


திருச்சி மாநகர், கொள்ளிடம் ஆற்றில் தற்பொழுது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆயிரம் கன அடி நீர் கொள்ளிடத்தில் திறந்து விட்டு உள்ளதால், பழைய இரும்பு பாலம் உடைக்கப்பட்டு அதில் கீழே சிமெண்ட் கட்டைகள் ஆற்றில் கிடைக்கிறது.


தண்ணீர் ஓடுவதால் அது தடுப்பணை போல் குளிப்பதற்கு சிறு அருவி போல் கொட்டி வருவதால் குளிக்க ஆசையாக உள்ளது என சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் காட்சிகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆயிரக்கணக்கானோர் அங்கே குளிக்க வர துவங்கி விட்டனர். அனைவரும் கொள்ளிடம் ஆற்றில் குதித்து நீராடுவதை வீடியோ காட்சிகளாக பதிவு செய்து தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


இந்நிலையில் திருச்சி தனியார் பள்ளியை சேர்ந்த சாம்ரோஜ் என்ற பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது நண்பர்கள் 5 பேருடன் குளிக்க சென்றுள்ளார்.


நண்பர்கள் கண் முன்னே சாம்ரோஜ் நீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற நண்பர்கள் முயற்ச்சி செய்தனர் ஆனால் முடியவில்லை. உடனடியாக சிறுவனின் பெற்றோர்களும், காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. 




கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் சடலமாக மீட்பு


மேலும் தகவல் அறிந்து வந்த 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் நேற்று மதியம் முதல் தொடர்ந்து தேடி வந்தனர். ஆனால் இரவு வரை மாணவனை கண்டுபிடிக்க முடியவில்லை. 


இதனை தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் நேற்று மதியம் மாயமான பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவனை இரண்டாவது நாளாக இன்று காலை முதல் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வந்தனர். 


குறிப்பாக ட்ரோன் கேமரா மற்றும் ஆக்சிஜன் உதவியுடன் ஸ்கூபா டைவிங் மேற்கொள்ளும் 2 தீயணைப்புத் துறை வீரர்கள் மூலம் தேடும் பணி தீவிரமாக தேடினர். தீயணைப்புத் துறையினர் கடுமையான முயற்சியால் சற்று முன் சிறுவன்  சடலமாக மீட்கப்பட்டான்.


கொள்ளிடம் ஆற்றில் சிறுவன் மூழ்கிய பகுதியில் 50 அடியில் இருந்து 80 அடி வரை ஆழம் நிறைந்த பகுதியாக இருக்கிறது.


தொடர்ந்து வரும் பொதுமக்களுக்கு தீயணைப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தும், யாரும் கண்டுகொள்ளாமல் அங்கே குளிக்க வருகின்றனர். கடந்த வாரமும் இதேபோல் 47 வயது மதிக்கத்தக்க ஒருவர் நீரில் மூழ்கி இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 




திருச்சி மாவட்ட நிர்வாகம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது


கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து அதிகரிக்கும்போது பொதுமக்கள் யாரும் குளிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு முறையும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.


கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் ஆங்காங்கே அதிக பள்ளங்கள் உள்ளது. நீர்வரத்து அதிகமாக செல்லும்போது அந்த பள்ளங்கள் நமக்கு தெரிவதில்லை ,விளையாட்டு மோகத்தில் இளைஞர்கள், சிறுவர்கள் குளிக்க செல்லும்போது தவறுதலாக நீரில் மூழ்கி விடுகிறார்கள். குறிப்பாக தற்போது சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பதிவிடுவது இளைஞர்கள் மத்தியில் ஒரு மோகம் அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களில் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்யும் நோக்கத்தோடு இதுபோன்ற தவறான செயல்களில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


ஒவ்வொரு முறையும் காவேரி,  கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து அதிகரிக்கும்போது மாவட்ட நிர்வாகம் சார்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் அது அலட்சியப் போக்கில் எடுத்துக்கொள்ளாமல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.