சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டப்பேரவை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகளுக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் சிந்தனை செல்வன், “சென்னை மெரினா கடற்கரையில் இரண்டு கலங்கரை விளக்கங்கள் செயல்பட உள்ளது.  ஒன்று கடலுக்கு வழிகாட்டுகிறது, மற்றொன்று மக்களுக்கு வழி காட்டுகிறது. மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.



தமிழக கிராமங்களில் இரட்டை சுடுகாடு இரட்டை குளம்  இன்றும் செயல்பட்டு வருகிறது, இந்த முறையை ஒழித்து சமத்துவ சுடுகாடு அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு இருக்கிறது, துணைத் தலைவர் பதவிகளுக்கும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு மீண்டும் செயல்படுத்தப்பட உள்ள நமக்கு நாமே திட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு செலவை மக்கள் ஏற்கும் வகையில் திட்டம் உள்ளது,  இம்முறையை மாற்றி நான்கில் ஒரு பங்கு என மக்கள் மீதான சுமையை குறைக்க வேண்டும்




சற்றேறக்குறைய லட்சம் கோடி ரூபாய் அளவிலான பொதுத்துறை பங்குகளை குத்தகை என்ற அடிப்படையில் தனியாருக்கு தாரைவார்க்கும் அறிவிப்பை  ஒன்றிய அரசு செய்திருக்கிறது, இது மிகப்பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது, இவ்வாறு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் தனது கொள்கை முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,  தமிழக அரசும் இதுகுறித்து பிரதமருக்கு உரிய அழுத்தத்தைத் தர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்