தமிழ்நாட்டில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9,10,11,12-ஆம் வகுப்புக்கு பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. 50 சதவீதம் மாணவர்களுடன் பள்ளிகள் திறக்கப்பட்டால் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து வழிமுறை வெளியிடப்பட்டுள்ளது.


அதில், ”அனைத்து பள்ளிகளிலும் சானிடைசர் வைக்கப்பட்டு, சுகாதார வசதிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் எச்சில் துப்புவதை தடுக்கவேண்டும். பள்ளிவரும் மாணவர்களுக்கு வைட்டமின் சி மாத்திரை, நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்க வேண்டும். பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் உடல்நிலையை வாரம் ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தெரிவித்திருந்தனர்.



இந்நிலையில் மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு மேற்கொள்ளப்பட வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திக்கேயன் அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில்,” ஒவ்வொரு பள்ளியிலும் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், தலைமை ஆசிரியர்கள் அனைவரும் கொரானா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.  ஒவ்வொரு பள்ளி வளாகத்தில் நுழைவுவாயில் அருகில் மாணவ, மாணவிகள் கைகளை கழுவுவதற்கு வசதியாக கைகளை கழுவுமிடம் ஏற்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்திற்குள் வரும் மாணவ, மாணவிகள் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். அனைத்து மாணவ, மாணவிகளையும் வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். அவசர தேவைக்கு ஏற்ப முகக்கவசங்களை இருப்பில் வைத்திருக்க வேண்டும். மாணவர்கள் அரசு அறிவுரைகளின்படி வரவழைத்து வகுப்புகள் நடத்தவேண்டும்.



மாணவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற ஏதும் தென்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்த தனி அறை ஏற்படுத்துமாறும், அவர்களை உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெற்றோருடன் அனுப்பிவைக்க வேண்டும். மாணவ, மாணவிகள் வகுப்பறை மற்றும் வளாகத்தில் தனிநபர் இடைவெளியினை பின்பற்ற செய்யவேண்டும். பள்ளிகள் திறப்பதற்கு முன்பு அனைத்து பள்ளிகளின் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து தயாராக வைத்திருக்க வேண்டும்.


மேலும் பள்ளிகளில் தேங்கியுள்ள தேவையற்ற பொருட்கள், குப்பைகள் உடனுக்குடன் அகற்றுமாறும். பள்ளி கழிப்பறைகளில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்குமாறும், பள்ளிகளில் அத்தியாவசியமான மராமத்து பணிகளை உடனடியாக மேற்கொள்ள மதுரை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் மாநகராட்சி பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிக்கை மூலம் அறிவுரை வழங்கியுள்ளார்.