"குடிசை மாற்று வாரியம்" என்பதை, "நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம்" என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் முத்துசாமி, கீதா ஜீவன் ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.


இந்த நிலையில், "குடிசை மாற்று வாரியம்" என்பதை, "நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம்" என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 






இதனைத் தொடர்ந்து, இரண்டு அடுக்குகளுக்கு மேல் புதிதாக கட்டப்படும் கட்டடத்தில் லிஃப்ட் உள்ளிட்ட வசதிகள் கட்டப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் லிஃப்ட், சாய்தள மேடை, சிறப்பு கழிவறை கட்ட வேண்டும். பார்வையற்றோருக்கான அறிவிப்பு பலகை, தனி வாகன நிறுத்தம் ஆகிய வசதிகள் செய்யப்பட வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கொள்கை விவரக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.






முன்னதாக, நெல்லை, மதுரை, தஞ்சை, சிவகங்கை, தேனி, தென்காசி, திண்டுக்கல், சேலம், நாமக்கல்லில் ரூ.950 கோடி செலவில் 6000 புதிய குடியிருப்புகளை கட்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. உலக வங்கி நிதியில் இந்த குடியிருப்புகளை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வண்டலூர் கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்துநிலையம் 2022 மார்ச் முதல் செயல்படத் தொடங்கும் என்றும், திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் ரூ.336 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் 2022 அக்டோபர் மாதம் முதல் செயல்படும் எனவும் கூறப்பட்டது.


Talibans | வெளியேறிய அமெரிக்கா, பிரிட்டன், நேட்டோ படைகள்.. டான்ஸ் ஆடி இறுதி ஊர்வலம் நடத்திய தலிபான்கள்