தமிழ்நாட்டில்  5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமை செயலாளர் என்ற நிலைக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 


2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தமிழ்நாடு அரசின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து அதிரடியாக ஆட்சியாளர்கள் மாற்றப்பட்டனர். அந்த வகையில் தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பதவி வகித்த அவர், கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத் துறைச் செயலாளராக இருந்த  சிவ்தாஸ் மீனா புதிய தலைமைச் செயலாளராக பதவியேற்றார். 


இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அடிக்கடி ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அனைத்து விதமான பதவிகளுக்கு டிரான்ஸ்ஃபர், பதவி உயர்வு உள்ளிட்ட மாற்றங்கள் நடைபெற்று வந்தது. இப்படியான நிலையில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் கூடுதல் தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 


இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, ‘தமிழ்நாடு அரசின் காதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் பொறுப்பில் வகிக்கும் ககன் தீப் சிங் பேடி, தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சுனில் பாலிவால், தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் கழகக்த்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எஸ்.விஜயகுமார், மற்றும் சுற்றுலா, கலை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் மணிவாசன் ஆகியோர் முதன்மை செயலாளர் நிலையில் இருந்து கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த 5 பேரில் மிக முக்கியமான ஐஏஎஸ் அதிகாரி யார் என்றால் அது ககன்தீப் சிங் பேடி தான். இவர் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, கடலூர் மாவட்ட ஆட்சியராக பதவி வகித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மதுரை மற்றும் கோவையில் ஆணையராகவும் பதவி வகித்துள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த அவர் கடந்த மே மாதம் தான் சுகாதாரத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் கூடுதல் தலைமை செயலாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க: Telangana CM: அன்றே கேசிஆருக்கு சவால் விட்ட ரேவந்த் ரெட்டி! தெலங்கானாவின் புதிய முதல்வராக இன்று பதவியேற்பு - யார் இவர்?