தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஒரு வாரம் நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டார். வரும் 7ஆம் தேதி காலை 6 மணியுடன் தளர்வுகள் அற்ற ஊரடங்கு முடியவிருந்த நிலையில் வரும் 14ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. இந்த 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

* தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள் காய்கறி, இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை 

கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

* காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

 

* மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதி. மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைதப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும்.

 


 

* இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

 

* அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

 

* சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

 

* தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவிகித பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.



 

முன்னதாக, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர், காவல் துறை டிஜிபி மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதையடுத்து, மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார். அந்தக் குழு கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என முதலமைச்சரிடம் பரிந்துரை செய்தது. அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். தளர்வுகள் அற்ற ஊரடங்கால் தொற்று பாதிப்பு குறைந்து, ஊரடங்கிற்கு நல்ல பலன் கிடைத்தது. தொற்று குறையத் தொடங்கிய மாவட்டங்களில் மட்டும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.