வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (01.02.2023) இரவு 11:30 மணி அளவில் நென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-திரிகோணமலையில் இருந்து கிழக்கு தென்கிழக்கே சுமார் 115 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென்கிழக்கே சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு - தென் மேற்கு திசையில் நகர்ந்து இன்று (02.02.2023) அதி காலை இலங்கை கடற்கரைப் பகுதிகளை கடக்கக் கூடும்.


இந்நிலையில் இன்று (பிப்.02) தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


இந்நிலையில், நாகை மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை பெய்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் இன்று விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.


திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல்  மயிலாடுதுறை மாவட்டத்தின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார்.


மேலும் தமிழ்நாட்டின் 28 மாநிலங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


மீனவர்களுக்கான எச்சரிக்கை


02.02.2023: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


03.02.2023: தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


 






04.02.2023: குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதையும் படிங்க: மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம்; நரிக்குறவர் சமுதாய மாணவனுக்கு உற்சாக வரவேற்பு