ஆய்வு செய்ய வரும்போது மாவட்ட நிர்வாகத்தினர் ஆடம்பர உணவு ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கடந்த மாதம் திமுக ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, புதிய தலைமைச் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், அதனை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்டந்தோறும் ஆய்வு செய்து வருகிறார்.


இந்நிலையில், தான் ஆய்வு செய்ய வரும்போது மாவட்ட நிர்வாகத்தினர் ஆடம்பர உணவு ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக  தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘நான் ஆய்வு செய்ய வரும்போது மாவட்ட நிர்வாகத்தினர் ஆடம்பர உணவுகளை ஏற்பாடு செய்யாமல், காலை, இரவு நேரங்களில் எளிய உணவும், மதியம் இரண்டு காய்கறிகளுடன் கூடிய சைவ உணவும் போதும். ஆடம்பர ஏற்பாட்டை தயவு செய்து தவிர்த்துவிடுங்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.




தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். கடந்த 7ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து, எந்த அழுத்தம் வந்தாலும் எந்த திட்டத்தின் கீழும் தான் எழுதிய புத்தகங்களை வாங்க கூடாது என தலைமைச் செயலாளர் இறையன்பு கேட்டுக்கொண்டார். 


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘நான் பணி நேரம் முடிந்த பின்பும், விடுமுறை நாட்களிலும் எனக்குத் தெரிந்த தகவல்களை வைத்தும், என் அனுபவங்களைத் தொடுத்தும் சில நூல்களை எழுதி வந்தேன். அவற்றில் உள்ள பொருண்மை, கடற்கரையில் கண்டெடுத்த சிப்பியையே முத்தாகக் கருதி சேகரிக்கும் சிறுவனின் உற்சாகத்துடன் எழுதப்பட்டவை. இப்போதுள்ள பொறுப்பின் காரணமாக பள்ளிக் கல்வித்துறைக்கு நான் ஒரு மடல் எழுதியுள்ளேன். நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும் எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமைச் செயலராகப் பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது என்கிற உத்தரவே அது. பார்ப்பவர்களுக்கு என் பணியின் காரணமாக அது திணிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றி களங்கம் விளைவிக்கும் என்பதால்தான் இத்தகைய கடிதத்தை எழுதியிருக்கிறேன். எந்த வகையிலும், என் பெயரோ, பதவியோ தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதே நோக்கம்.


லஞ்சம் வாங்கினால் உடனடி பணிநீக்கம் - தலைமை செயலர் இறையன்பு எச்சரிக்கை


அரசு விழாக்களில் பூங்கொத்துகளுக்கு பதிலாக புத்தகங்கள் வழங்கினால் நன்று என்கிற அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஆணை அது. அரசு விழாக்களில் அரசு அலுவலர்கள் யாரும் என்னை மகிழ்விப்பதாக எண்ணி என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ பரிசாக பூங்கொத்துகளுக்கு பதில் விநியோகிக்க வேண்டாம் என்று அன்புடன் விண்ணப்பம் வைக்கிறேன். இவ்வேண்டுகோள் மீறப்பட்டால் அரசு செலவாக இருந்தால் தொடர்புடைய அதிகாரியிடம் அது வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்படும். சொந்த செலவு செய்வதையும் தவிர்ப்பது சிறந்தது. எனவே, இத்தகைய சூழலை எக்காரணம் கொண்டும் ஏற்படுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ எனக் கூறப்பட்டிருந்தது. 


"எந்த திட்டத்தின் கீழும் நான் எழுதிய புத்தகங்களை வாங்கக்கூடாது" - தலைமைச் செயலாளர் இறையன்பு