தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு இன்று வெளியிட்ட அறிவிப்பில், “நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக கொரோனா தொற்று இருந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த நம் மாநிலத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் பரவாமல் தடுத்தல், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை காத்தல் ஆகிய இரண்டு முக்கிய இலக்குகளோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.


மருத்துவ பாதிப்பு, மனநல பாதிப்பு, நிதி நெருக்கடி ஆகிய மூன்றும் நாட்டையும், நாட்டு மக்களையும் ஒன்று சேர்ந்து தாக்குதல் நடத்தும் இந்த நேரத்தில், ஒரு சில அரசு அலுவலர்கள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் வணி நிறுவனங்களைச் சேர்ந்த சிலர் மேற்கொள்ளும் சட்டத்திற்கு புறம்பான மனிதாபிமானமற்ற செயல்கள் முதல்வரின் கவனத்திற்கு வரப்பெற்றுள்ளது. அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.




இதன் அடிப்படையில் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, அரசின் இலவச சேவைகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களிடம் கையூட்டு பெறுவது போன்ற மனிதநேயமற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. தவறு செய்யும் அலுவலர்கள் மீது பணிநீக்கம் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.


மேற்படி செயல்கள் குறித்து, உடனடியாக தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசுத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் காவல்துறையின் லஞ்ச ஒழிப்பு பிரிவு ஆகியோர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. எந்த நிலையில் உள்ள அலுவலராக இருப்பினும் அல்லது எந்த நிறுவனமாக இருந்தாலும், புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு தவறு நடக்கக்கூடிய இடங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த அறிவுரை வழங்கப்படுகிறது.


மக்களின் உயிர்காக்கும் பணியில் முழு முனைப்போடு ஈடுபட்டு வரும் அரசுக்கு, தவறு செய்யும் ஒரு சிலரால் அவப்பெயர் ஏற்படாமல் கவனமாகவும், கண்ணியமாகவும் செயல்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.


தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரு நாள் மட்டும்  கொரோனா தொற்று காரணமாக 364 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையும் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சில தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அரசின் சேவைகளை பெறுவதற்கு சில இடங்களில் கையூட்டு பெறப்படுவதாகவும் தொடர் புகார்கள் எழுந்து வந்தது. இந்த சூழலில், தலைமை செயலாளர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது