பெண் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 


கடந்த 2018 ஆம் ஆண்டு எஸ்.வி.சேகர், பெண் பத்திரிக்கையாளர் குறித்து மிகவும் தரக்குறைவான கருத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் எஸ்.வி.சேகருக்கு எதிராக தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு  பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டது. இதனையடுத்து எஸ்வி சேகர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. 






எஸ்.வி.சேகர் மீது பெண்கள் மீதான் கொடுமைகள் தடுப்பு பிரிவு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. மேலும் இதுதொடர்பான வழக்கு சென்னை எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் மீதான வழக்கு விசாரணை மேற்கொள்ளும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீண்ட விசாரணைக்குப் பின் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது பேசிய நீதிபதி ஜெயவேல், ‘எஸ்.வி.சேகர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது’ என தீர்ப்பளித்தார்.


இதனைத் தொடர்ந்து எஸ்.வி.சேகர் அபராதத் தொகை செலுத்திய பின் மேல்முறையீடு செய்ய ஏதுவாக அவரது சிறை தண்டனை தீர்ப்பானது சிறப்பு நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில் சிறப்பு நீதிமன்றத்தால் தனக்கு வழங்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனை உத்தரவை நிறுத்தி வைக்குமாறு எஸ்.வி.சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனு மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு தண்டனையை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க: Electoral bond: தேர்தல் பத்திரங்களில் எந்த நிறுவனங்கள் எவ்வளவு நிதி? லிஸ்ட்டில் டாப் 5 நிறுவனங்கள்