கொடைக்கானலில் 100 ருபாயை கடந்த பெட்ரோல், டீசல் விலையின் எதிரொலி கொடைக்கானல் பகுதியில் கண்கலங்குகின்றனர். கிராமபுற வாகன ஓட்டிகள், இந்தியாவில் ச‌ர்வ‌தேச‌ ச‌ந்தையில் கச்சா  எண்ணெயின் விலை உயர்வால்,தமிழகத்தில் பெட்ரோல்,டீசல் விலை நாளுக்கு நாள்  உயர்ந்து கொண்டே வருகிறது, இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், சுற்றுலா தலமாகவும் மலைகள் அதிகம் சூழ்ந்த மலைப்பிரதேசமாகவும் திகழ்கிறது.




இந்த பகுதியை சுற்றி சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமபுற பகுதிகள் உள்ளது, இந்த பகுதிகள் முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில் மட்டுமே பிரதானமாக இருந்து வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் , பழங்கள் மற்றும் பூக்கள் வகைகளை விற்பனை செய்ய அதிகமாக திண்டுக்கல் சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொடைக்கானல் சுற்றியுள்ள கிராமபுற பகுதிகளில் விவசாய தேவைகளுக்கும் அத்யாவசிய தேவைகளுக்கும் அதிகமாக சொந்த வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். பொதுவாக மற்ற பகுதிகளில் விற்கப்படும் பெட்ரோல் , டீசல் விலையை விட கொடைக்கானல் பகுதிகளில் சற்று அதிகமாக லிட்டருக்கு 1 ருபாய் கூடுதல் விலைக்கு விற்பனையாகும், காரணம் திண்டுக்கல் பகுதியிலிருந்து மலைவழிச்சலையாக கொடைக்கானலுக்கு செல்ல வேண்டும் அதற்கான போக்குவரத்து வாகன செலவுகளை ஈடுசெய்ய கொடைக்கானலில் மட்டும் மற்ற இடங்களில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலையை காட்டிலும் 1 ருபாய் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படும். தற்போது நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தினம்தோறும் அதிகரித்து வரும் நிலையில் மற்ற இடங்களை காட்டிலும் கூடுதலாக இது வரை இல்லாத விலையில் 100 ருபாய்க்கு மேல் லிட்டர் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. இது தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக கூடுதல் விற்பனையாகும்.



இன்று அதிகபட்சமாக 1 லிட்டர் பெட்ரோலின் விலை 100ரூபாய் 4 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் டீச‌ல் 93 ரூபாய் 92 பைசாவிற்கும்,  ஸ்பீடு பெட்ரோல் 102ரூபாய் 83 பைசாவிற்கும் பெட்ரோல் ப‌ங்குக‌ளில் விற்ப‌னை செய்ய‌ப்ப‌டுகிற‌து. பெட்ரோல் டீசலின் விலை உய‌ர்வால் வாக‌ன‌ ஓட்டிகள் க‌வ‌லை அடைந்துள்ள‌ன‌ர், தற்போது கொரோனா ஊரடங்கால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓட்டம் இல்லாததால் அத்யாவசிய தேவைக்கு, பொதுமக்கள் அதிகமாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.



இந்த சூழலில் ஏற்கனவே கொரோனா ஊரடங்கு எதிரொலியால்  கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மலை பகுதிகளில் உள்ள மக்கள் வேலையின்மையால் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில் தற்போது தொடர்ந்து பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.  அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயரும் எனவும் பொதுமக்கள் கவலையுடன் கூறுகின்றனர், பெட்ரோல்,டீசல் விலையை குறைப்பதற்கு மத்திய,மாநில அரசுகள்   நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் முதன் முறையாக கொடைக்கானல் மலை பகுதிகளில் பெட்ரோல் விலை  100 ரூபாயை  கடந்தது குறிப்பிடத்தக்கது.