கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து 1.20 லட்சம் கன அடி நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு தமிழகத்திற்கு வந்து கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 1.15 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணை இன்னும் ஓரிரு நாளில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மத்திய நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



100 அடி எட்டியது மேட்டூர் அணை:


கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் இருந்து வரும் நீரானது அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து உபரிநீராக ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதேபோன்று கபினி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு 19,250 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த 10 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 அடி உயர்ந்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் வரத்து 93,828 கன அடியாக அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் தற்போது மேட்டூர் அணை 71 வது முறையாக 100 அடியை எட்டி உள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 63.69 டி.எம்.சி ஆக உயர்ந்துள்ளது. 


முழு கொள்ளளவு எப்போது?


தொடர்ந்து, ஓரிரு நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து அணையின் முழு கொள்ளளமான 120 அடியை எட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அணை முழு கொள்ளளவை எட்டியவுடன் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும். எனவே காவிரி கரையோரத்தில் உள்ள சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு மத்திய நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு மத்திய நீர்வளத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. 



நீர் திறப்பு:


காவிரி பாசனம் பெறும் பகுதிகளான சேலம், ஈரோடு, கரூர், திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில், 28.07.2024 முதல் 03.08.2024 வரை 7 நாட்களுக்கு, வினாடிக்கு 5000 கன அடி வீதம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது.


காவிரி ஆறு:


கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்ட ங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலப்பது குறிப்பிடத்தக்கது.