மத்திய அரசு கடந்த 23ம் தேதி நாட்டின் 2024-25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்தது. மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் தவிர பிற மாநிலங்களுக்கு போதியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதால், பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று கூறியிருந்தார்.


நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்?


இந்த நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "இந்நேரம் டெல்லியில் நடைபெறும் பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டிய நான், மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால் நீதி கேட்டு மக்கள் மன்றமான உங்கள் முன்னால் பேச வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளேன்.


தமிழ்நாட்டில் நடைபெறும் இந்த திராவிட மாடல் அரசு கடந்த 3 ஆண்டுகாலமாக எத்தகைய முற்போக்கு மற்றும் தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறதுனு உங்களுக்கு தெரியும். நம்ம அரசோட திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும், ஒவ்வொரு குடிமகனுக்கும் நேரடியாக கிடைக்குது. அதுனாலதான் தி.மு.க.வுக்கு வெற்றி மேல வெற்றி குவியுது.


அரசியல் நோக்கத்தோட அரசு பட்ஜெட்:


நாள்தோறும் திட்டங்கள், மக்கள் மனதில் மகிழ்ச்சி இதுதான் அரசோட எண்ணம். இப்படிப்பட்ட நமது அரசோட எண்ணத்துக்கு இடையூறு ஏற்படுத்துகிற செயல்களை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. ஒரு அரசு எப்படி செயல்படனும் அப்படிங்குறதை நான் அடிக்கடி சொல்லிட்டு வர்றேன். ஒரு நல்ல அரசு வாக்களித்த மக்களுக்கு மட்டுமில்ல, வாக்களிக்க மறுத்த மக்களுக்கும் பாடுபடனும். இப்படித்தான் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருது.


மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு வர்றதுக்கு முன்னாடி இருந்த எல்லா ஒன்றிய அரசுகளும் அப்படித்தான் இருந்தது. ஆனா, இந்த பெருந்தன்மை ஒன்றிய பா.ஜ.க. அரசுகிட்ட இல்ல. இவங்க மட்டும்தான் அரசியல் நோக்கத்தோட அரசு நடத்துறாங்க. அதுக்கு அடையாளம்தான் 23ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்.


மக்களை பழிவாங்கும் நடவடிக்கை:


நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல்ல மக்களுக்கு எதிராக நடந்து கொண்ட பா.ஜ.க.வை பல மாநில மக்களும் புறக்கணித்தாங்க. அப்படி புறக்கணித்த மக்களை பழிவாங்கும் நடவடிக்கையாதான் நிதி அமைச்சர் தாக்கல் செஞ்ச ஒன்றிய பட்ஜெட் அமைஞ்சுருக்கு.


ஒட்டுமொத்த மக்களுக்கும் தாக்கல் செய்ய வேண்டிய பட்ஜெட்டை இந்தியா கூட்டணிக்கு வாக்களிச்ச மக்களை பழிவாங்க பண்ணிருக்காங்க. இது இந்திய அரசியல் சட்டத்தின்பால் அவர் ஏற்றுக்கொண்ட பதவிபிரமாணத்துக்கே முரணானது.


ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை புறக்கணிச்சுகிட்டே வர்றாங்க. தமிழ்நாட்டுக்குனு அவங்க அறிவிச்ச ஒரே திட்டம் எய்ம்ஸ் மருத்துவமனை. அதுவும் 10 ஆண்டுகள் ஆகியும் என்ன நிலைமையில இருக்குனு உங்களுக்கு தெரியும்.


தமிழ்நாட்டுக்குனு எந்த சிறப்புத் திட்டத்தையும் தராமல் தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.விற்கு வாக்களிக்கும்னு எப்படித்தான் எதிர்பார்க்குறீங்க? 3வது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைச்சுருக்காங்க. இந்திய மக்கள் பெரும்பான்மைய அளிக்கல. ஒரு சில மாநில கட்சிகள் ஆதரவு அளிக்கலன பா.ஜ.க.வால ஆட்சி அமைக்கவே முடியாது.


இப்படிப்பட்ட நிலைமையில பா.ஜ.க.வோட சறுக்கலுக்கு என்ன காரணம்னு உணர்ந்து பா.ஜ.க. திருந்திருக்கும்னு நினைச்சேன். பட்ஜெட்டுக்கு 2 நாள் முன்னாடிகூட தமிழ்நாட்டோட தேவை என்னனு பா.ஜ.க.வுக்கு தெரியப்படுத்துனேன். அதுல இருந்து ஒன்னு கூட நிதியமைச்சர் அறிவிக்கல. அவ்வளவு ஏன் தமிழ்நாடு என்ற சொல்லே பட்ஜெட்டுல இல்ல."


இவ்வாறு அவர் பேசினார்.