அரசு பேருந்தில் கூடுதல் லக்கேஜுக்கு 500 ரூபாய் - பெண்மணியை இறக்கி விட்ட வந்த நடத்துனர்
லக்கேஜுக்கு டிக்கெட் எடுக்க முடியாது என்று சொன்னதற்காக, அரசு பேருந்து ஓட்டுநரும், நடத்துனரும் சர்மிளாவை வெள்ளகோவில் அருகில் , அரசு பேருந்தில் இருந்து பாதி வழியில் இறக்கிவிட்டு சென்றனர்.

அரசு பேருந்தில் கூடுதல் லக்கேஜுக்கு 500 ரூபாய் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த பெண்மணி - கூடுதல் பணம் தர முடியாது என்பதற்காக பெண்மணியை பாதி வழியில் இறக்கி விட்டு வந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

திருச்சி மாவட்டம் கல்லணை பகுதியை சேர்ந்தவர் சர்மிளா (52). கணவரை இழந்த. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் கோவை மாவட்டம், துடியலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக சொந்த ஊரான திருச்சி செல்வதற்காக சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து, அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
தனக்கான டிக்கெட் தொகையாக 155 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்துள்ளார். டிக்கெட் எடுத்த அவரிடம் டிராவல் பேக் ஒன்றும், கூடுதல் லக்கேஜ் ஒன்றும் இருப்பதை அறிந்த நடத்துனர், அந்த கூடுதல் லக்கேஜுக்கும் டிக்கெட் எடுக்க வேண்டுமென்றும், அதற்காக 500 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த சர்மிளா கூடுதல் லக்கேஜுக்கு 500 ரூபாய் என்பது அதிகமாக இருப்பதால் எடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து கூடுதல் லக்கேஜுக்கு டிக்கெட் எடுக்க முடியாது என்று சொன்னதற்காக, அரசு பேருந்து ஓட்டுநரும், நடத்துனரும் சர்மிளாவை வெள்ளகோவில் அருகில் பாதி வழியில் இறக்கிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அரசு பேருந்தில் இருந்து பாதி வழியில் இறக்கிவிட்டு சென்றதால் சாலையில்
கண்ணீருடன் நின்று கொண்டிருந்த சர்மிளாவை அந்த வழியாக காரில் சென்ற இளைஞர் ஒருவர், கரூர் பேருந்து நிலையம் வரை வந்து இறக்கிவிட்டு சென்றுள்ளார். கரூர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக விசாரணை அலுவலகத்தில் சர்மிளா நடந்ததை தெரிவித்து, சம்பந்தப்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துவிட்டு, மீண்டும் மற்றொரு பேருந்தில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.