கர்நாடகாவின் உள்பகுதி அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக நேற்று சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கனமழையும், வட தமிழக கடலோர மாவட்டங்கள், அதையொட்டிய உள்மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது.




வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்து வரும் நாட்களில் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்தது. இதனால் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்வதற்கும் வாய்ப்பு உள்ளது.


நாளை (நவம்பர் 23) மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 24) தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், இதர மாவட்டங்கள்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.




இந்த நிலையில், கடந்த 9-ந் தேதி பெய்த கனமழையால் சென்னையில் கடுமையான வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் மத்தியக்குழுவினர் இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். மேலும், கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மத்தியக்குழு ஆய்வு செய்ய உள்ளது.








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்




ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்