Bar Council: நீதிமன்றங்களுக்கு செல்லும் வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், லெக்கின்ஸ் அணியக் கூடாது என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.


வழக்கறிஞர்களுக்கு ஆடை கட்டுப்பாடு:


இந்திய பார் கவுன்சில் வகுத்துள்ள ஆடை விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.  இதுகுறித்து தமிழ்நாடு  மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில், "இந்திய பார் கவுன்சில் விதிகளின்படி, ஆடை விதிமுறைகள் பின்பற்றவில்லை என்பது  தங்கள் கவுன்சிலின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, வழக்கறிஞர்கள் அணியும் ஆடைகள் அல்லது கவுன்களின் வடிவம் இந்திய பார் கவுன்சில் விதிகளின் படி, இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். 
 
மேலும், "உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில்  ஆஜராகும் வழக்கறிஞர்கள்  கண்ணியமாக ஆடைகளை அணிய வேண்டும். ஆண் வழக்கறிஞர்களை பொறுத்தவரை, ​​வழக்கறிஞர் கவுன்களுடன் கூடிய கருப்பு  கோட், கழுத்தில் வெள்ளை பட்டை, வெள்ளை சட்டை அணிய வேண்டும். வழக்கறிஞர் கவுன்களுடன் முழு நீள கருப்பு அல்லது வெள்ளை பேண்ட் அணிந்துவர வேண்டும். ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


"லெக்கின்ஸ் அணியக் கூடாது”


 ”பெண் வழக்கறிஞர்கள் ​​கருப்பு முழு கை ஜாக்கெட், வெள்ளை பட்டைகள் மற்றும்  வழக்கறிஞர்கள் கவுன்கள், காலர் கொண்ட அல்லது இல்லாத வெள்ளை  பட்டைகள் மற்றும் கருப்பு கோட் அணிய வேண்டும். வெள்ளை அல்லது கருப்பு நிற புடவைகள், அச்சு அல்லாத வடிவமைப்பு இல்லாத அடக்கமான நிறம் கொண்ட உடை, பஞ்சாபி உடையான சுரிதார்- குர்தா அல்லது சல்வார், குர்தாவுடன், கருப்பு கோட் மற்றும் பட்டைகள் கொண்ட  உடை அணிய வேண்டும். ஜீன்ஸ் அணிவது, கேத்ரிங் பேன்ட்,  ஷார்ட்ஸ்,  லெகின்ஸ் போன்றவை கண்டிப்பாக வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களுக்கு வரும்போது அணிந்திருக்கக் கூடாது. வெயில் காலங்களில் கருப்பு கோட் அணிவது கட்டாயமில்லை. ஆனால், உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் கட்டாயம் அணிய வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
மேலும், "ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எல்லா நேரங்களிலும் பரிந்துரைக்கப்பட்ட உடையில்  மட்டுமே ஆஜராக வேண்டும். உரிய ஆடை விதிகளின்படி, ஆஜராக வேண்டியது அனைத்து  வழக்கறிஞர்களின் கடமை என்றும், வக்கீல்கள் சட்டம், 1961 இன் பிரிவு 35இன்  கீழ்  எந்த மீறலும் தொழில்முறை தவறான நடத்தைக்கு சமம்” என தெரிவித்துள்ளார்.  "இந்திய பார் கவுன்சில் அல்லது நீதிமன்றம் பரிந்துரைக்கும் நிகழ்வுகள், நீதிமன்றங்களைத் தவிர மற்ற பொது இடங்களில் எந்த ஒரு வழக்கறிஞரும் கழுத்துப் பட்டையையோ, வழக்கறிஞர் கவுனையோ அணிந்திருக்கக் கூடாது” என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.




மேலும் படிக்க


Child Marriage: குழந்தைத்‌ திருமணம்‌ இல்லா தமிழ்நாடு; அனைத்துப் பள்ளிகளிலும் உறுதிமொழி எடுக்க உத்தரவு


Thalaivar 170: கன்னியாகுமரியில் ரஜினிகாந்த்.. நேரில் சென்று சந்தித்த பொன். ராதாகிருஷ்ணன்!