வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலைக்கொண்டிருந்தது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னை  அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இதன்படி, வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்று அதிகாலைகாலை முதல் கரையை கடக்கத் தொடங்கி காலை 7 மணியளவில் கரையை கடந்தது. 




காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்தது. பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. வட கடேலோர மாவடடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. மேலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.


இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடப்பதால் இன்று  திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல, நாளை கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழையும் நாளை பெய்யக்கூடும்.




வரும் 21-ந் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வட உள் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று இரவு வரை நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டித்தீர்த்தது. மெரினாவில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை நீடிக்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண