ஈஷா மயானங்களில் 3 மாதத்திற்கு இலவச தகனம்!

ஈஷா சார்பில் கோவையில் 12 மயானங்கள், சென்னையில் 4, நாமக்கல் மற்றும் நெய்வேலியில் தலா ஒன்று என மொத்தம் 18 மயானங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் மருத்துவ உதவிகளை ஈஷா வழங்கி வருகிறது.

Continues below advertisement

தமிழ்நாட்டில் ஈஷாவின் பராமரிப்பின் கீழ் இயங்கும் 18 மயானங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக தகனம் செய்யலாம் என ஈஷா அமைப்பு தெரிவித்துள்ளது.

Continues below advertisement

இது தொடர்பாக ஈஷா அறக்கட்டளை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈஷா மயானங்கள், கொரோனா தொற்றால் காலமானவர்களுக்கு கட்டணமின்றி தகன சேவையை அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கும். இந்த உயிர் கொல்லி வைரசுக்கு அன்பிற்குரியவர்களை பறிகொடுத்தோருக்கு ஆதரவாய் இருக்க விரும்புகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பதிவு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் தமிழக சுகாதாரத் துறை ஆகியோருக்கு டேக் செய்யப்பட்டுள்ளது.

ஈஷா சார்பில் கோவையில் 12 மயானங்கள், சென்னையில் 4, நாமக்கல் மற்றும் நெய்வேலியில் தலா ஒன்று என மொத்தம் 18 மயானங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் மருத்துவ உதவிகளை ஈஷா வழங்கி வருகிறது. மேலும், அனைத்து மயானங்களும் நல்ல முறையில் தூய்மையாக பராமரிக்கப்பட்டும் வருகின்றன.

சமீபத்தில், சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஈஷா மயானங்களில், காலமானவர்களை உகந்த சூழலில் நுண்ணுணர்வுடன் விடுவிக்க தன்னார்வத்தொண்டர்கள் அயராது உழைக்கிறார்கள். இது வாழ்வோருக்கும் விடைபெறுவோருக்கும் மிகவும் முக்கியம். ஆசிகள்" என்று கூறியுள்ளார். 


கடந்த ஒரு வருடமாக கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் சேவையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சவால் மிகுந்த இந்தப் பணியை மயான ஊழியர்கள் ஈஷாவின் ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டுதல்படி மிகுந்த பாதுகாப்பாக செய்து வருகின்றனர். அவர்களின் உடல் நலனில் ஈஷா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. தினமும் கபசுர குடிநீர் அல்லது நிலவேம்பு கசாயம் வழங்குவது, சத்தான உணவுகளை வழங்குவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் யோக பயிற்சிகளை கற்றுக்கொடுப்பது, தேவைப்படும்போது உடனுக்குடன் மருத்துவ உதவிகள் வழங்குவது போன்ற பணிகளை செய்து வருகிறது. மேலும், அவர்கள் ஈஷாவின் முறையான பயிற்சியின் காரணமாக, உயிரிழந்தவர்களின் உடல்களை மிகுந்த மரியாதையுடன் தகனம் செய்கின்றனர். இறந்தவர்களின் உறவினர்களுடன் மென்மையாக நடந்து கொள்கிறார்கள். 

இப்பணியில் ஈஷாவின் பிரம்மச்சாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் ஆதரவளிக்கின்றனர். மேலும், அங்கு கால பைரவர் சன்னதி இருப்பதால் அந்த இடம் ஒரு கோவில் போல் புனிதமாக பராமரிக்கப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால், மயானத்திற்கு வரும் இறந்தவர்களின் உறவினர்கள் ஈஷா ஊழியர்களின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கொரோனா பணிக்காக 500 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கிய ஈஷா மையம்

கடந்த வாரம், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஈஷா யோகா அமைப்பு சார்பில் முதல்கட்டமாக 500 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், பி.பி.இ கிட்கள், முக கவசங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டன. அத்துடன், கொரோனாவால் உயிர் இழக்கும் நபர்களை மயானத்திற்கு கொண்டு செல்வதற்காக 2 வாகனங்களும் வழங்கப்பட்டன. 

Continues below advertisement