கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஈஷா யோகா அமைப்பு சார்பில் முதல்கட்டமாக 500 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், பி.பி.இ கிட்கள், முக கவசங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டன. அத்துடன், கொரோனாவால் உயிர் இழக்கும் நபர்களை மயானத்திற்கு கொண்டு செல்வதற்காக 2 வாகனங்களும் வழங்கப்பட்டன. 


கோவையில் இன்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, வனத் துறை அமைச்சர் ராமசந்திரன், பொள்ளாச்சி தொகுதி எம்.பி. சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் இந்தப் பொருட்கள் வழங்கப்பட்டன. சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், கோவை அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலா, டி.ஆர்.ஓ.ராமதுரை உள்ளிட்ட அதிகாரிகள், முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.




மேலும், கோவை அரசு மருத்துவமனைக்கு மட்டும் 500 பி.பி. இ.கிட்கள், 5,000 N95 முக கவசங்கள், 500 CPAP முக கவசங்கள் ஆகியவை வழங்கப்பட்டன. இவை தவிர, ஈஷா சார்பில் கோவையில் உள்ள கிராமங்களில் பல்வேறு நிவாரணப் பணிகளை ஈஷா பிரம்மச்சாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் நேரடியாக செய்து வருகின்றனர். கிராம மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் யோகப் பயிற்சிகளை கற்றுக்கொடுப்பது, முன் களப் பணியாளர்களுக்கு முக கவசம் மற்றும் சானிடைசர் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் இதில் அடங்கும். 


மேலும், தமிழ்நாட்டில் ஈஷாவின் பராமரிப்பில் இயங்கும் 18 மயானங்களில் கொரோனா நோயாளிகளை தகனம் செய்யும் சேவையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.