அர்ச்சகர் நியமனத்தில் சமூகநீதியை பாழ்படுத்தும் வகையில் தவறான கருத்துகள் பரப்பப்படுவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.


இதுதொடர்பாக பேரவையில் பேசிய முதலமைச்சர்,  “தற்போது கோயில்களில் ஏற்கெனவே பணியில் உள்ள அர்ச்சகர்கள் யாரும் நீக்கப்படவில்லை. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை சீர்குலைக்க அர்ச்சகர் நியமனத்தில் சமூகநீதியை பாழ்படுத்தும்வகையில் தவறான கருத்துகள் பரப்பப்படுகிறது. கலைஞர் கொண்டு வந்த சட்டம் நடைமுறைக்கு வராமல் இருந்தது. அதை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம்” என்று  விளக்கமளித்துள்ளார். மேலும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் எப்போதும் கைவிடப்படாது என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.




அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது குறித்த விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்


பேரவைத் தலைவரே, அறநிலையத் துறை அமைச்சர், ஒரு விளக்கத்தை இங்கே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். அதுகுறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் உறுதியோடு சொல்கிறேன். நம்மை ஆளாக்கிய நம்முடைய ஈரோட்டுச் சிங்கம். பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாருடைய நெஞ்சிலே தைத்த முள் இது. அந்த முள்ளை எடுத்திட வேண்டுமென்பதற்காக  கலைஞர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியிருந்தார்கள். ஆனால், அது நடைமுறைக்கு வரமுடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் இப்போது அதனை நாம் நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறோம். அதற்கான பணி ஆணைகளை நாம் வழங்கியிருக்கிறோம்.


ஆனால், சிலர் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், இங்கேகூட நம்முடைய  அமைச்சர் சொல்கிறபோது. 'ஊடகத்திலே' என்று சொன்னார்கள். ஊடகத் துறையினரை நான் குறை சொல்ல விரும்பவில்லை. ஆனால், அதைப் பயன்படுத்திக் கொண்டு, சமூக வலைதளங்களில், இதை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்திலே சிலர் திட்டமிட்டு,  சில காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். யாரையும், எந்தப் பணியிலிருந்தும் விடுவித்து இந்தப் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. அப்படி எங்கேயாவது வழங்கப்பட்டிருந்தால், அவர்கள் ஆதாரத்தோடு சொல்வார்களென்று சொன்னால், அதற்குரிய நடவடிக்கையை இந்த அரசு நிச்சயமாக எடுக்கும். அதிலே எந்தவிதமான சந்தேகமும்பட வேண்டிய அவசியமில்லை. ஆகவே, வேண்டுமென்றே அதைக் கொச்சைப்படுத்தி, அரசியலுக்காகவோ அல்லது சமூக நீதியைப் பாழடிக்க வேண்டுமென்ற நோக்கத்திலே சிலர் திட்டமிட்டு செய்து கொண்டிருப்பதை மக்கள் நன்றாக அறிவார்கள் என்பதை மாத்திரம் நான் தங்கள் மூலமாக இந்த அவையிலே பதிவு செய்ய விரும்புகிறேன். 






முன்னதாக, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு சென்னையில் செய்தியாளர்களுக்கு விளக்கம் கொடுத்தார். அந்தப் பேட்டியில், “திருக்கோயில்களில் பல ஆண்டுகளாக பூஜைகளில் ஈடுபட்டு உள்ள அர்ச்சகர்களுக்கு பாதிப்பு இல்லாமல் அனைத்து சாதியினர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளனர். கோயில்களில் ஏற்கெனவே உள்ள பட்டாச்சாரியார்களையோ அர்ச்சகர்களையோ யாரையும் பணியில் இருந்து நீக்கும் திட்டம் இல்லை. வயது மூப்பிற்கு பின்பும் கோயில்களில் அர்ச்சகர்கள் பணியாற்றி வருகின்றனர். ஏற்கெனவே அர்ச்சகர்களாக உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை. முறையாக பயிற்சி பெற்ற 58 பேர் அர்ச்சகர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


ஆனால், 58 அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக சிலர் தவறான பிரச்சாரம் செய்கின்றனர். கோயில்களில் யாரும் பணியை இழந்திருந்தால் எங்களிடம் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் சட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை எங்கும் மீறவில்லை. மிரட்டலுக்கு பணியும் அரசு அல்ல திமுக அரசு. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான முன்னேற்றத்துக்கு பாடுபட்டார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அது தவறென்றால், அந்த தவறை முதல்வர் ஸ்டாலினும் செய்வார் ” என்று கூறினார்.


Sekar Babu | "முன்னாள் முதல்வர் கருணாநிதி செய்தது தவறென்றால், அதை முதல்வர் ஸ்டாலினும் செய்வார்" - அமைச்சர் சேகர் பாபு