மத்திய அரசின் உர மானியம் கிடைப்பதற்கு விவசாயிகளின் சாதி விவரங்கள் கேட்கப்படுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு இந்த நடைமுறையை கைவிடுமாறும் பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


உழவுத் தொழில் புனிதமானது; அனைவருக்கும் பொதுவானது. அதற்கான உர மானியம் பெறும் உழவர்களை சாதியின் அடிப்படையில் பார்ப்பது தவறு என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இது தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புணி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:


மானியத்துடன் கூடிய உரங்களை உழவர்கள் வாங்கும்போது,  அவர்கள் சாதி பிரிவைத் ( பொது/ஓபிசி/எஸ்.சி/எஸ்.டி) தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என்று  நடுவண் உரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உர விற்பனைக் கருவியின் மென்பொருளில் இதற்கான வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.


உழவுத் தொழில் புனிதமானது:


உழவுத் தொழில் சாதியின் அடிப்படையில் நடைபெறவில்லை. உர மானியமும் சாதியின் அடிப்படையில் வழங்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது  உர மானியம் வழங்குவதற்கான சாதிப் பிரிவுகளை கோருவது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. நடுவண் அரசின் இந்த விதி உழவர்களை காயப்படுத்தியுள்ளது என்று சாடியுள்ளார்.


உழவர்களின் அச்சம் தீர்க்கப்பட வேண்டும்


 உர மானியம் பெறுவோரின் சாதிப் பிரிவுகளை அறிந்து அவற்றின் அடிப்படையில் உர மானியம் வழங்க நடுவண் அரசு திட்டமிட்டிருக்கிறதோ என்ற ஐயம் உழவர்கள் நடுவே ஏற்பட்டிருக்கிறது. உழவர்களின் இந்த  ஐயத்தை உடனடியாக போக்க வேண்டியது நடுவண் அரசின் கடமை.


திரும்ப பெறுக


உழவுத் தொழில் புனிதமானது; அனைவருக்கும் பொதுவானது. அதற்கான உர மானியம் பெறும் உழவர்களை சாதியின் அடிப்படையில் பார்ப்பது தவறு. எனவே, உரம் வாங்கும் உழவர்களின் சாதிப் பிரிவை கோரும் கூறை விற்பனைக் கருவியின் மென் பொருளில் இருந்து நீக்க நடுவண் அரசு நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.




மேலும் வாசிக்க.


MK Stalin : "இன்று ஈரோடு; நாளை நம் நாடு; நாற்பதும் நமதே, நாடும் நமதே" - தொண்டர்களுக்கு உற்சாக கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின்


Power loom: விசைத்தறி தொழிலாளர்களுக்கு அதிரடி ஆஃபர் வழங்கிய முதலமைச்சர்! 1000 யூனிட் மின்சாரம் இலவசம்